கோவையில் சட்டவிரோத குட்கா ஆலை: தி.மு.க. பிரமுகரை கைது செய்தது ஏன்? பரபரப்பு தகவல்கள்


கோவையில் சட்டவிரோத குட்கா ஆலை: தி.மு.க. பிரமுகரை கைது செய்தது ஏன்? பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 11 May 2018 11:00 PM GMT (Updated: 11 May 2018 7:00 PM GMT)

கோவையில் சட்டவிரோதமாக குட்கா ஆலை செயல்பட்ட விவகாரத்தில் தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

கோவை,

கோவையை அடுத்த சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட குட்கா ஆலை விவகாரத்தில் தி.மு.க. பிரமுகரும், கண்ணம்பாளையம் முன்னாள் பேரூராட்சி தலைவருமான தளபதி முருகேசன் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டது குறித்து பரபரப்பான தகவலை மாவட்ட போலீசார் வெளியிட்டு உள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்ட போலீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம், நல்லம்மாள் தோட்டத்தில் உள்ள ‘அமித் எஸ்பிராக் ரன்சஸ்’ என்ற தொழிற்சாலையை சோதனையிட்டு அங்கிருந்த மேலாளர் ரகுராமன் என்பவரை விசாரித்த போது, இந்த தொழிற்சாலையில் சட்டவிரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா தயாரிக்கப்பட்ட விவரம் தெரியவந்தது.

இது தொடர்பாக டெல்லியை சேர்ந்த அமித்ஜெயின் (வயது38), கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்த ரகுராமன்(45), உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அஜய் (30), ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராம்தேவ் (24), சோஜிராம் (29) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் அமித்ஜெயினை தவிர 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

குட்கா வழக்கின் 2-வது எதிரியான மேலாளர் ரகுராமன் என்பவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ததில், கண்ணம்பாளையம் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் தளபதி முருகேசன் என்பவர் தங்களது தொழிற்சாலைக்கு உரிமம் பெறுதல், குடிநீர் இணைப்பு பெறுதல், உள்ளூர் திட்டக்குழும (எல்.பி.ஏ.) அனுமதி பெறுதல் மற்றும் விவசாய நிலத்தை தொழிற்சாலைக்கு உரியதாக மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக தங்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு உதவினார் என்ற விவரத்தை தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் கொடுத்தார். அதன் அடிப்படையிலும், மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்தியதன் பேரிலும் தளபதி முருகேசனும் இந்த சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த தளபதி முருகேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் தடை செய்யப்பட்ட குட்காவை வெளியிடங்களுக்கு ஏற்றிச்செல்ல இவர் மூலம், இவருடைய உறவினரின் லாரியை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. அந்த லாரியும் கைப்பற்றப்பட்டு தளபதி முருகேசன் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

தளபதி முருகேசன் தடை செய்யப்பட்ட குட்கா நிறுவனத்திற்கு பல வழிகளில் உதவியாக இருந்து, அதற்காக, தான் பணம் பெற்ற விவரம் வெளிவரக்கூடாது என்பதற்காக மேற்படி குட்கா ஆலையை போலீசார் சோதனையிட்டபோது அந்த சோதனைக்கு இடையூறு செய்யும் வகையில் சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கார்த்திக் என்பவரின் துணையுடன் அவரது கட்சியினரை ஒன்று திரட்டி அரசு அதிகாரிகளை கடமையை செய்ய விடாமல் தடுத்துள்ளார் என்று தெரியவருகிறது.

போராட்டம் நடத்திய கூட்டத்தினரில் வேறு யாருக்கேனும் குட்கா நிறுவனத்துடன் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும், வேறு யாரேனும் முக்கிய புள்ளிகளின் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் சட்டவிரோத செயலுக்கு கூட்டாக சேர்ந்து அவர்கள் உதவி புரிந்துள்ளனரா? என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதான தளபதி முருகேசன் சூலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் மேலும் விசாரணை நடத்த அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

Next Story