ஊத்துக்குளியில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது


ஊத்துக்குளியில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 11 May 2018 10:15 PM GMT (Updated: 11 May 2018 7:14 PM GMT)

ஊத்துக்குளியில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.

ஊத்துக்குளி,

ஊத்துக்குளி ரெயில் நிலையம் பெரியார் வீதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவர் அதே பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கருப்பாயாள் (வயது 54). நேற்று பழக்கடையில் இருந்து கருப்பாயாள் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, இவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வந்தார். அவர், கருப்பாயாள் அருகில் மோதுவது போல் சென்று, கருப்பாயாள் அணிந்திருந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து சென்றுவிட்டார்.

உடனே கருப்பாயாள் திருடன், திருடன் என்று சத்தம் போடவே, அங்கிருந்தவர்கள் அந்த வாலிபரை விரட்டி சென்றனர். ஆனால் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டார். இதைதொடர்ந்து ஊத்துக்குளி போலீஸ்நிலையத்துக்கு கருப்பாயாள் தகவல் கொடுத்தார்.

இதுபற்றி அனைத்து பகுதியில் உள்ள சோதனை சாவடிகளுக்கும், ரோந்து போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இந்தநிலையில் கூலிப்பாளையம் நால்ரோடு பகுதியில் ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, கருப்பாயாளிடம் நகையை பறித்துச்சென்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். உடனே அந்த வாலிபரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர், உடுமலை அருகே கொழுமம் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் ஹரிமூர்த்தி(24) என்பது தெரியவந்தது.

இதைதொடர்ந்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஹரிமூர்த்தியை கைதுசெய்தனர். பின்னர் அவரிடம் இருந்து கருப்பாயாளின் நகையை மீட்டதுடன், நகைபறிப்புக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல்செய்தனர். இதைதொடர்ந்து ஹரிமூர்த்தி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

Next Story