கோவில்பட்டியில் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு கயத்தாறில் கட்சிக்கொடி ஏற்றினார்


கோவில்பட்டியில் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு கயத்தாறில் கட்சிக்கொடி ஏற்றினார்
x
தினத்தந்தி 11 May 2018 9:30 PM GMT (Updated: 11 May 2018 7:15 PM GMT)

கோவில்பட்டி, கயத்தாறில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் கயத்தாறில் அ.தி.மு.க. கட்சிக்கொடியை ஏற்றினார்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி, கயத்தாறில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் கயத்தாறில் அ.தி.மு.க. கட்சிக்கொடியை ஏற்றினார்.

உற்சாக வரவேற்பு

கோவில்பட்டியில் 2-வது குடிநீர் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதியம் மதுரையில் இருந்து காரில் கோவில்பட்டிக்கு வந்தார். அவருக்கு நகர எல்லையான தோட்டிலோவன்பட்டி விலக்கில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் தலைமையில் திரளானவர்கள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர். பின்னர் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் முன்பு குருவிகுளம் ஒன்றிய செயலாளர் வாசுதேவன், வக்கீல் பால்ராஜ் உள்ளிட்டவர்கள் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கட்சி கொடியேற்றினார்

பின்னர் கயத்தாறு மேல பஜாரில் முதல்-அமைச்சருக்கு ஆளுயர மாலை அணிவித்து பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கயத்தாறு கீழ பஜாரில் முன்னாள் நகர பஞ்சாயத்து துணை தலைவர் முருகேசன் தலைமையில் செண்டை மேளம் முழங்க, முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு புதிதாக அமைக்கப்பட்ட அ.தி.மு.க. கொடிக்கம்பத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி கொடியேற்றினார்.

அங்கு சாலையின் இருபுறமும் திரளாக கூடியிருந்த மக்களுக்கு வணக்கம் தெரிவித்தவாறு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறிது தூரம் நடந்து சென்றார். அப்போது அங்கு நின்ற வயதான முதியவரிடம் முதல்-அமைச்சர் பேசி, அவருக்கு நிதி உதவி வழங்கினார். கம்மவார் சங்க தலைவர் மாரியப்பன், செயலாளர் சுப்புராஜ், துணை செயலாளர் செல்வராஜ், அ.தி.மு.க. நகர செயலாளர் கப்பல் ராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சாமி தரிசனம்

பின்னர் கடம்பூரில் உள்ள காமராஜர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கடம்பூர் அம்பிகை மாரியம்மன் கோவில் சித்திரை பொங்கல் விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் நாகராஜா, நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் மோகன், ஒன்றிய பொருளாளர் வாசமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி விடுதியில் சிறிதுநேரம் ஓய்வு எடுத்தார். பின்னர் அவர் கோவில்பட்டி ஆயிரவைசிய மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் நடந்த 2-வது குடிநீர் திட்ட தொடக்க விழாவில் பங்கேற்றார்.

Next Story