மதுகுடிக்க பணம் தராததால் லாரி டிரைவர் வெட்டிக்கொலை மகன் கைது


மதுகுடிக்க பணம் தராததால் லாரி டிரைவர் வெட்டிக்கொலை மகன் கைது
x
தினத்தந்தி 11 May 2018 10:00 PM GMT (Updated: 11 May 2018 8:36 PM GMT)

பெத்தநாயக்கன்பாளையத்தில், மதுகுடிக்க பணம் தராததால் லாரி டிரைவரை வெட்டிக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

பெத்தநாயக்கன்பாளையம்,

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் 6–வது வார்டு அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 55). லாரி டிரைவர். இவருடைய மனைவி செல்வி. இவர்களது மகன் ரஞ்சித்குமார் (24). இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் உண்டு.

நேற்று முன்தினம் இரவு மதுகுடிக்க கணேசனிடம் ரஞ்சித்குமார் பணம் கேட்டார். ஆனால் கணேசன் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ரஞ்சித்குமார் அரிவாள்மனையை எடுத்து கணேசனை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த கணேசன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சரவணகுமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் போலீசார் கணேசனின் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் ரஞ்சித்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story