டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு: 4 கிராம மக்கள் போராட்டம்


டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு: 4 கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 11 May 2018 10:45 PM GMT (Updated: 11 May 2018 10:03 PM GMT)

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, 4 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோபால்பட்டி,

திண்டுக்கல் தாமரைப்பாடியில், டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வந்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி இந்த மதுக்கடை மூடப்பட்டது. இதையடுத்து அந்த மதுக்கடையை ராஜக்காபட்டி ஊராட்சி குமாரபாளையம் லட்சுமிநாயக்கன்பட்டி பிரிவில் அமைக்க டாஸ்மாக் நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான பணிகள் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் அங்கு டாஸ்மாக் கடை அமைக்க லட்சுமி நாயக்கன்பட்டி, பூசாரிபட்டி, கல்லுப்பட்டி, குமாரபாளையம் பகுதியை சேர்ந்த கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் டாஸ்மாக் மதுக் கடையை திறக்கக் கூடாது என்றுகூறி லட்சுமிநாயக்கன்பட்டி பிரிவில் 4 கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம்நாராயணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த வழியாக தான் 4 கிராம மக்களும் சென்று வர வேண்டும். இங்கு மதுக்கடை அமைத்தால் தேவையின்றி வீண் பிரச்சினை ஏற்படும்.

குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்படுவார் கள். எனவே இங்கு மதுக்கடை அமைக்கக்கூடாது என்று கிராமமக்கள் தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதை ஏற்றுக் கொண்ட கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

Next Story