மது விற்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் பெண் கைது


மது விற்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் பெண் கைது
x
தினத்தந்தி 12 May 2018 8:10 AM GMT (Updated: 12 May 2018 8:10 AM GMT)

பொம்மிடி அருகே சந்து கடை அமைத்து மது விற்பனை செய்வதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள ரேகடஅள்ளி கிராமத்தில் சந்து கடை அமைத்து மதுபானம் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை போலீசார் மற்றும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் சந்து கடை அமைத்து மது விற்பனை செய்வதை கண்டித்து நேற்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பொம்மிடி- கடத்தூர் ரோட்டில் மதுபாட்டில்களுடன் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொம்மிடி போலீசார் சமபவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சந்து கடை அமைத்து மது விற்பனை செய்வதால் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். மது விற்பனை செய்யும் பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,. மது விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து போலீசார் சந்து கடை அமைத்து மதுவிற்ற ராணி என்பவரை கைது செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story