சிகரெட் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் 7½ பவுன் நகை பறிப்பு


சிகரெட் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் 7½ பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 12 May 2018 10:15 PM GMT (Updated: 12 May 2018 5:27 PM GMT)

இரணியல் அருகே சிகரெட் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் 7½ பவுன் நகையை மர்ம நபர் பறித்து சென்றார். இதுபோல், முளகுமூட்டில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த குழந்தையிடம் இருந்து 2 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் திருடி சென்றுள்ளார்.

அழகியமண்டபம்,

இரணியல்  அருகே உள்ள மாங்குழி பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் சேவியர். இவரது மனைவி சசிகலா (வயது 36). இவர் அந்த பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு கடையில் அமர்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்து சசிகலாவிடம் சிகரெட் வேண்டுமென்று கேட்டார்.

சசிகலா அதை எடுத்து கொடுத்த போது, அந்த நபர் திடீரென சசிகலாவின் கழுத்தில் கிடந்த 7½ பவுன் தங்க சங்கிலியை பறித்தார்.

 உடனே, சசிகலா ‘திருடன்... திருடன்...’ என கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர், மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுவிட்டார்.

இதுகுறித்து சசிகலா இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிகரெட் வாங்குவது போல் நடித்து நகை பறித்த மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

தக்கலை அருகே உள்ள முளகுமூடு தேரிவிளையை சேர்ந்தவர் பிராங்கிளின் ஜெஸ்டஸ் (வயது 45). இவர் தனது வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர் ஒருவர் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்தார். அவர் படுக்கை அறையில் தூங்கி கொண்டிருந்த குழந்தையின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை திருடினார்.

அப்போது, திடீரென பிராங்கிளின் ஜெஸ்டஸ் கண் விழித்தார். அவர் மர்ம நபரை பார்த்து சத்தம் போட்டார். உடனே, அந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து பிராங்கிளின் ஜெஸ்டஸ் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

Next Story