கூடலூரில் மண்ணுரிமை மீட்பு போராட்ட குழு தர்ணா


கூடலூரில் மண்ணுரிமை மீட்பு போராட்ட குழு தர்ணா
x
தினத்தந்தி 12 May 2018 10:30 PM GMT (Updated: 12 May 2018 7:15 PM GMT)

கூடலூரில் மண்ணுரிமை மீட்பு போராட்ட குழு சார்பில் தர்ணா நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்டு கட்சிகளின் மாநில செயலாளர்கள் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூடலூர்,

கூடலூர் தொகுதியில் அரசு நிலங்களில் குடியிருக்கும் பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்க வேண்டும். விவசாயிகளின் கைவச நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். தனியார் வன பாதுகாப்பு சட்டத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தை பாதுகாக்க வேண்டும். வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து பொதுமக்களை தாக்குவதை தடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்ணுரிமை மீட்பு போராட்ட குழு சார்பில் கூடலூர் காந்தி திடலில் நேற்று தர்ணா நடைபெற்றது.

இதற்கு ஒருங்கிணைப்பாளர் வாசு தலைமை தாங்கினார். தே.மு.தி.க. திருப்தி மணி, இந்திய கம்யூனிஸ்டு முகமதுகனி, மனிதநேய மக்கள் கட்சி சாதிக்பாபு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சகாதேவன் ஆகியோர் வரவேற்றனர்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது-

அரசு நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு மின்சாரம் வழங்க வில்லை. இதனால் மாணவ- மாணவி கள் படிக்க முடியாத அவலநிலை உள்ளது. மாநில அரசு வழங்கிய இலவச மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடிய வில்லை. முடிவு செய்யப்படாத பிரிவு-17 நில பிரச்சினைக்கு தீர்வு காண சட்டத்தை மாற்றி விவசாயிகளுக்கு பட்டா, மின்சாரம் வழங்க வேண்டும். வனவிலங்குகள் தாக்கி உயிரிழக்கும் மக்களுக்கு கேரளாவில் வழங்குவது போல் ரூ.10 லட்சமும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலையும் வழங்க வேண்டும்.

பிரிவு-17 நிலப்பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. மேலும் இங்குள்ள வனங்களை பாதுகாக்க வனத்துறை தவறி விட்டது. இதனால் வனங்கள் அழிந்து விட்டன. வனவிலங்குகள் ஊருக்குள் வருகிறது. எனவே அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டால் இப்பகுதியில் உள்ள மக்களின் பிரச்சினைகள் களையப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் போர்க்களம் போல் மாறி விட்டது. மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாத அரசு உள்ளதால் தன்னெழுச்சி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு மாநிலத்துக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க முடியாது என உச்சநீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து நீட் தேர்வை தமிழகத்தில் அமல்படுத்தி உள்ளது.

இதனால் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் மருத்துவர் ஆக முடியாது. நீட் தேர்வில் 49 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டுள்ளன. தமிழக மாணவர்கள் மருத்துவர் ஆகி விடக்கூடாது என மத்திய அரசு நினைக்கிறது.

காவிரி பிரச்சினையில் மத்திய அரசு காலதாமதம் செய்வதால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 50 ஆண்டுகளாக தொடர் போராட்டங்கள் நடத்தியும் பட்டா, மின் இணைப்பு வழங்கப்பட வில்லை. கூடலூர் பகுதியில் உள்ள மக்களுக்கு வாக்காளர் அடை யாள அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட வை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மின் இணைப்பு வழங்க மட்டும் மறுப்பது ஏன்? என தெரிய வில்லை.

தமிழ்நாட்டை தமிழர்கள் ஆட்சி செய்தும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பது இல்லை. யானைகள் வசிப்பிடம் அழிக்கப்பட்டு உள்ளதால் அவைகள் ஊருக்குள் வருகிறது. நீலகிரியில் தரிசாக கிடக்கும் நிலங்களில் வனத்தை பெருக்க வேண்டும். இதனால் காட்டு யானைகள் ஊருக்குள் வராது. தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் லாபகரமாக இயங்கி வந்த நிலையில் தற்போது நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதனால் டேன்டீ தொழிலாளர்கள் 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊட்டி அரசு பூங்கா ஊழியர்களும் போராடி வருகின்றனர்.

எனவே ஊட்டிக்கு வருகை தர உள்ள தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இப்பகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக உறுதி அளிக்க வேண்டும். இல்லை எனில் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story