பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களை கைது செய்யக்கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களை கைது செய்யக்கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 May 2018 11:00 PM GMT (Updated: 12 May 2018 7:15 PM GMT)

பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களை கைது செய்யக்கோரி திருப்பூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

திருப்பூர்,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்களின் சவ ஊர்வலம் சென்றபோது அதை தடுத்த மற்றொரு பிரிவினர் சரமாரியாக கற்களை வீசி கடுமையாக தாக்கியுள்ளனர். இது தொடர்பாக போலீசில் பொதுமக்கள் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் இருதரப்பிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே கடந்த 5-ந்தேதி பொதுமக்கள் பலர் தாக்கப்பட்டனர். வீடுகளில் இருந்த வாகனங்கள் பல தீவைத்து எரிக்கப்பட்டன.

இந்த தாக்குதலின் பின்னணியில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பினர் இருப்பதாகவும், பொதுமக்களை தாக்கிய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். பொதுமக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை வாபஸ் பெற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும். உடைமைகளை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணி திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர்குமார் தலைமை தாங்கி பேசினார். கோட்ட செயலாளர் சேவுகன், மாவட்ட தலைவர் அண்ணாத்துரை, பொதுச்செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். இதில் துணைத்தலைவர்கள் பாஸ்கர், சாமுண்டி, செந்தில், செய்தி தொடர்பாளர் முருகேசன் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனை பொருட்படுத்தாமல் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நன்றியை தெரிவித்தனர். தொடர்ந்து இந்து முன்னணியில் அவர்கள் இணைந்தனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

Next Story