விருத்தாசலம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.3 லட்சம் பறிமுதல்: கைதான 2 பேர் ஹவாலா கும்பலை சேர்ந்தவர்களா? போலீசார் விசாரணை


விருத்தாசலம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.3 லட்சம் பறிமுதல்: கைதான 2 பேர் ஹவாலா கும்பலை சேர்ந்தவர்களா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 May 2018 10:45 PM GMT (Updated: 12 May 2018 7:15 PM GMT)

விருத்தாசலம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 பேர் ஹவாலா கும்பலை சேர்ந்தவர்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருத்தாசலம்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் நேற்று காலையில் விஜயமாநகரத்தில் வாகன சோதனை நடத்தினர். அப்போது விருத்தாசலத்தில் இருந்து மங்கலம்பேட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது வாகனத்திற்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. இது பற்றி விசாரித்தபோது 2 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து அவர்கள் கொண்டு வந்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் ரூ.3 லட்சம் இருந்தது. அந்த பணம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் கேட்டபோது, 2 பேரும் அவரை ஆபாசமாக திட்டி பணி செய்ய விடாமல் தடுத்து, மிரட்டினர்.

இதையடுத்து 2 பேரையும் போலீசார் மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், சென்னை துறைமுகம் ஆதன்தெருவை சேர்ந்த ஜலீல் அகமது மகன் லுக்மான்அகமது(வயது 24), சென்னை மன்னடியைச் சேர்ந்த ராசிர்பரித் மகன் ஷேக் அப்துல்காதர்(28) ஆகியோர் என்பதும், அந்த பணத்தை எடுத்துச் செல்வதற்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை என்பதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து லுக்மான் அகமது, ஷேக்அப்துல்காதர் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். இருவரும் ஹவாலா பணம் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களா?, ரூ.3 லட்சத்தை எங்கிருந்து யாருக்காக கொண்டு செல்கிறார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story