ஆத்தூரில் தாறுமாறாக ஓடிய லோடு ஆட்டோ மோதி 4 பேர் காயம்


ஆத்தூரில் தாறுமாறாக ஓடிய லோடு ஆட்டோ மோதி 4 பேர் காயம்
x
தினத்தந்தி 12 May 2018 8:30 PM GMT (Updated: 12 May 2018 7:19 PM GMT)

ஆத்தூரில் தாறுமாறாக ஓடிய லோடு ஆட்டோ மோதி 4 பேர் காயம் அடைந்தனர்.

ஆறுமுகநேரி, 

ஆத்தூரில் தாறுமாறாக ஓடிய லோடு ஆட்டோ மோதி 4 பேர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

தாறுமாறாக ஓடிய லோடு ஆட்டோ

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே பண்டாரவிளை ஜோதிலிங்க நாடார் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் இம்மானுவேல். லோடு ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவில் தனது லோடு ஆட்டோவில் ஆத்தூருக்கு புறப்பட்டு சென்றார். ஆத்தூர் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தை கடந்து சென்றபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த லோடு ஆட்டோ தாறுமாறாக ஓடியது. அப்போது சாலையோரம் நடந்து சென்ற முக்காணியைச் சேர்ந்த விவசாயியான ராமச்சந்திரன் (வயது 51) என்பவர் மீது லோடு ஆட்டோ மோதியது.

பின்னர் அந்த வழியாக பழையகாயலை அடுத்த புல்லாவெளி மேலத்தெருவைச் சேர்ந்த மகேசுவரன் (49), தன்னுடைய மனைவி பேச்சியம்மாள் (45), மகன் சந்தனவேல் (8) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் மீதும் லோடு ஆட்டோ மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் காயம் அடைந்தனர்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த ராமச்சந்திரனுக்கு தூத்துக்குடி தனியார் ஆஸ்பத்திரியிலும், பேச்சியம்மாளுக்கு ஆத்தூர் தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் மகேசுவரன், சந்தனவேல் ஆகியோரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story