ஆண்டாவூருணி ஊராட்சியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு, ஆழ்குழாய் அமைக்க தீர்மானம்


ஆண்டாவூருணி ஊராட்சியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு, ஆழ்குழாய் அமைக்க தீர்மானம்
x
தினத்தந்தி 12 May 2018 9:45 PM GMT (Updated: 12 May 2018 7:23 PM GMT)

ஆண்டாவூருணி ஊராட்சியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் ஆழ்குழாய் அமைக்க வேண்டும் என்று சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொண்டி,

திருவாடானை யூனியன் ஆண்டாவூருணி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் கடந்த 2017-18-ம் நிதியாண்டில் நடைபெற்ற வளர்ச்சி பணிகளின் சமூக தணிக்கை நடைபெற்றது. இதனையொட்டி சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் சாலமோன்ராஜா தலைமையில் கிராம சமூக தணிக்கை வல்லுனர் சுதா, விசாலினி, மலர்கொடி ஆகியோர் கிராம ஊராட்சி பதிவேடுகள் பார்வையிடுதல், வேலை அட்டை மற்றும் தினசரி வருகை பதிவேடுகள் சரிபார்த்தல், வேலைகள் நடைபெற்றதை கள ஆய்வு செய்தல் மற்றும் அளவீடு செய்தல், குடியிருப்புகள் அளவில் கூட்டம் நடத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அறிக்கை தயார் செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து சமூக தணிக்கை தொடர்பாக சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அந்தோணி தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுபா, சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் சாலமோன்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தார். அனைவரையும் ஊராட்சி செயலாளர் ராமநாதன் வரவேற்றார்.

இதில் ஆண்டாவூருணி ஊராட்சியில் 2017-18-ம் நிதியாண்டில் நடைபெற்ற ஆண்டாவூருணி கண்மாய் ஆழப்படுத்துதல் மற்றும் மரக்கன்றுகள் நடுதல், வரத்துக்கால்வாய் தூர்வாருதல் போன்ற பணிகளின் சமூக தணிக்கை அறிக்கையை கிராம சமூக தணிக்கை வல்லுனர் சுதா, விசாலினி ஆகியோர் வாசித்தனர்.

அதனைத்தொடர்ந்து கிராம சபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், பெண்கள் சார்பில் ஆண்டாவூருணி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

கடுமையான வறட்சி காரணமாக தண்ணீர் பிரச்சினை இருந்து வருகிறது. எனவே புதிதாக ஆழ்குழாய் அமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சித்தாமங்கலம் கிராம மயான சாலை சீரமைக்க வேண்டும். பனிச்சகுடி கிராமத்தில் மேல்நிலை தொட்டி கட்ட வேண்டும். பரமணிவயல் கிராம சாலையை சீரமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். இதில் கிராம பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் களப்பணியாளர் சகாயம் நன்றி கூறினார். 

Next Story