தூத்துக்குடி மாவட்டத்தில் உலக செவிலியர் தின விழா


தூத்துக்குடி மாவட்டத்தில் உலக செவிலியர் தின விழா
x
தினத்தந்தி 12 May 2018 9:00 PM GMT (Updated: 12 May 2018 7:24 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் உலக செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது.

கோவில்பட்டி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் உலக செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது.

கோவில்பட்டி

‘கைவிளக்கு ஏந்திய காரிகை’ பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த நாளை உலக செவிலியர் தினமாக நேற்று கொண்டாடினர். இதையொட்டி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவ படத்துக்கு டாக்டர்கள், செவிலியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, அர்ப்பணிப்பு உணர்வுடன் நோயாளிகளுக்கு சேவை புரிவோம் என்று உறுதிமொழி ஏற்றனர். செவிலியர்கள் கேக் வெட்டி, அனைவருக்கும் வழங்கினர்.

அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கமலவாசன், நிலைய மருத்துவர் பூவேசுரி, செவிலியர் கண்காணிப்பாளர் ஜெஸி கிறிஸ்டியாள், பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன், ரோட்டரி சங்க தலைவர் முத்துசெல்வன், செயலாளர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிறந்த செவிலியராக தேர்வு செய்யப்பட்ட கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி செவிலியர் விஜயலட்சுமிக்கு சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பதக்கம், சான்றிதழ் வழங்கினார். செவிலியர் விஜயலட்சுமிக்கு டாக்டர்கள், செவிலியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

திருச்செந்தூர்-தூத்துக்குடி

இதேபோன்று திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் உலக செவிலியர் தின விழாவை முன்னிட்டு, பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் உருவ படத்துக்கு டாக்டர்கள், செவிலியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, நோயாளிகளுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை புரிவோம் என்று உறுதிமொழி ஏற்றனர். பின்னர் அவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு, ஆஸ்பத்திரியின் அனைத்து வார்டுகளுக்கும் அணிவகுத்து சென்றனர்.

சிறந்த செவிலியருக்கான விருதினை செல்வராணிக்கு தலைமை டாக்டர் பொன் ரவி வழங்கினார். டாக்டர்கள் சியாமளா, பாபநாசகுமார், சண்முகநாதன், அரவிந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது. அரசு ஆஸ்பத்திரி உதவி உறைவிட மருத்துவர் இன்சுவை, டாக்டர் ஜெயபாண்டி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் கலந்து கொண்ட செவிலியர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாநில அளவில் சிறந்த செவிலியருக்கான விருதை பெற்ற செவிலியர் கண்காணிப்பாளர் ஜூடித் அல்போன்ஸ், செவிலியர் பத்மா மற்றும் மாவட்ட அளவில் சிறந்த செவிலியருக்கான விருதை பெற்ற ஆனந்தஜோதி ராஜ்பாய், நாகஜோதி ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Next Story