சிவகங்கையில் கிராபைட் தொழிற்சாலையை முதல்-அமைச்சர் விரைவில் தொடங்கி வைப்பார், அமைச்சர் பாஸ்கரன் தகவல்


சிவகங்கையில் கிராபைட் தொழிற்சாலையை முதல்-அமைச்சர் விரைவில் தொடங்கி வைப்பார், அமைச்சர் பாஸ்கரன் தகவல்
x
தினத்தந்தி 12 May 2018 10:15 PM GMT (Updated: 12 May 2018 7:28 PM GMT)

சிவகங்கையில் உள்ள கிராபைட் தொழிற்சாலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் தொடங்கி வைப்பார் என்று அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.

சிவகங்கை,

சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த குமாரப்பட்டி, கரம்போடை, அரசனூர், சிவகங்கை-தொண்டி ரோடு ஆகிய இடங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் புதியதாக கட்டப்பட்ட பால் கூட்டுறவு சங்க பயணியர் நிழற்குடை, மேல்நிலை நீர் தேக்க தொட்டி, பல் நோக்கு கட்டிடம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய கட்டிடங்கள் தொடக்க விழா மாவட்ட கலெக்டர் லதா தலைமையில் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் வரவேற்று பேசினார்.

தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பேசியதாவது:- அ.தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து ஒவ்வொரு முறையும் வறுமையில் உள்ளவர்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெற என்னென்ன திட்டங்கள் தேவை என்பதை சிந்தித்து செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் செயல்படும் ஒவ்வொரு திட்டமும் இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு முன்உதாரணமான திட்டங்களாக உள்ளன.

இந்த அரசு ஊராட்சி பகுதிகள் முழுமையாக வளர்ச்சி பெறவேண்டும் என்ற அடிப்படையில் பொதுமக்களுக்கு தேவையான திட்டப் பணிகளை நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஊராட்சியிலும் குடிநீர் திட்ட பணிக்கு சிறப்பு கவனம் எடுத்து மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆழ்துளை கிணறு மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்றவை உடனுக்குடன் அமைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. குமாரப்பட்டி ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர கோரிக்கை விடப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் சுற்றுச்சுவர் கட்டித் தரப்படும். அதேபோல் இப்பகுதியில் ரூ.7லட்சம் மதிப்பீட்டில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணி நடைபெற உள்ளது. மேலும் சிவகங்கையில் பிரதான தொழிற்கூடமாக இருந்து வந்த கிராபைட் தொழிற்சாலை தற்போது செயல்படாமல் இருந்து வருகிறது. இப்பகுதியில் தொழிற்சாலைக்கென இடம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கும் ஒப்பந்தம் இருந்த போதும் தொழிற்சாலை இயங்காததால் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்து வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இது தற்போது உரிய நடவடிக்கையில் உள்ளது. மிக விரைவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கு நேரில் வந்து இந்த கிராபைட் தொழிற்சாலையை தொடங்கி வைப்பார்.

அதன் மூலம் இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு உருவாகும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ராமபிரதீபன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) விஜயநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், அருள்ஜோசப், உதவி பொறியாளர்கள் ராஜா, தேவிகா, முன்னாள் எம்.எல்.ஏ சந்திரன் மற்றும் சசிக்குமார், அரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி செயற்பொறியாளர் நானிலதாசன் நன்றி கூறினார். 

Next Story