கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஜி.எஸ்.டி., மூலப்பொருட்கள் விலை உயர்வால் சிறு, குறு தொழில்கள் பாதிப்பு - ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி


கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஜி.எஸ்.டி., மூலப்பொருட்கள் விலை உயர்வால் சிறு, குறு தொழில்கள் பாதிப்பு - ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 12 May 2018 11:15 PM GMT (Updated: 12 May 2018 7:37 PM GMT)

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மூலப்பொருட்கள் விலை உயர்வு, ஜி.எஸ்.டி. உள்ளிட்டவற்றால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளன என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று காந்திபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அந்த கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவையில் உள்ள தொழில்கள் ஏற்கனவே மின் பற்றாக்குறை, ஆர்டர் பற்றாக்குறை, வங்கிகளில் கடன்கள் உரிய வகையில் கிடைக்காதது, எந்திரங்கள் இயக்கும் திறன் பெற்ற ஆபரேட்டர்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் திணறிவருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தி உள்ளது.

இந்த ஜி.எஸ்.டி. மற்றும் மூலப்பொருள் விலை உயர்வு காரணமாக சிறு, குறு தொழில்கள் கடும் பாதிப்படைந்து உள்ளது. குறிப்பாக மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் சுமார் 40 சதவீதம் வரை உற்பத்தி குறைப்பு செய்யப்பட்டு உள்ளதாக தொழில்துறையினரே தெரிவிக்கின்றனர். இந்த உற்பத்தி குறைவால் தொழில் நிறுவனங்கள் பாதிப்படைவது மட்டுமின்றி இதனை நம்பிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்தித்து உள்ளனர். எனவே மத்திய மாநில அரசுகள் இந்த பிரச்சினையில் தலையிட்டு சிறு, குறு தொழில்நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும்.

கோவையில் உள்ள 15-க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் ஒன்று கூடி, கோவையின் ஜீவாதாரமாக உள்ள சிறு, குறு தொழில்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகளை சந்திக்க போவதாகவும், இதில் தீர்வு கிடைக்காவிட்டால் வழி காட்டும் குழு அமைத்து போராடப்போவதாகவும் தகவல் வந்துள்ளன. இதனை நாங்கள் வரவேற்கிறோம்.

மேலும் அமைப்புகள் தனித்தனியாக போராட்டங்கள் நடத்தாமல், இந்த தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களையும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் சிறு, குறு தொழில்நிறுவனங்களை பாதுகாக்க முடியும். இதேபோல் திருப்பூரில் 26 ஆயிரம் கோடியாக இருந்த ஆடைகள் ஏற்றுமதி தற்போது 23 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது. எனவே எதிர்காலத்தில் அனைத்து தொழில்துறையினரையும் இணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

தற்போது நடைபெற்ற நீட் தேர்வுக்கான தமிழ் கேள்வித்தாளில் மொழியாக்கம் தவறாக கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் 68 கேள்விகள் பிழையாக இருந்துள்ளன. இதை மாணவர்களால் சரியாக புரிந்து தேர்வு எழுதி இருக்க முடியாது. எனவே தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மத்திய கல்வி வாரியம் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும். இதேபோல பல்கலைக்கழகங்களில் நடைபெரும் முறைகேடுகள், பேராசிரியர் நிர்மலா தேவியின் விவகாரம் ஆகியவற்றை கண்டித்து கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் மதுரை காமராஜர் பல்கலை கழகம் முற்றுகை போராட்டம் விரைவில் நடைபெற உள்ளது.

மாணவர்கள் வருகை குறைவாக உள்ள அரசுப்பள்ளியை மூடுவது என்கிற முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மாணவ-மாணவிகளின் வருகை குறைவதற்கான காரணத்தை ஆய்வு செய்து அதனை நிவர்த்தி செய்ய வேண்டும். அரசுப்பள்ளியை மூடுவது என்பது ஏழை, எளிய மாணவர்களின் கல்வியை பாதிக்கும். எனவே அரசு ஒருபோதும் அத்தகைய முடிவை எடுக்கக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story