ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் சார்பில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு வஸ்திர மரியாதை


ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் சார்பில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு வஸ்திர மரியாதை
x
தினத்தந்தி 12 May 2018 10:30 PM GMT (Updated: 12 May 2018 8:09 PM GMT)

சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை கொண்டுவரப்பட்டது.

ஸ்ரீரங்கம்,

ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த ஆண்டாள், பெருமாள் மீதிருந்த பக்தியால் அவருக்கு பூமாலை தொடுக்கும் தொண்டு செய்து, அவருக்கு மனைவியானாள். ஆண்டாள் மணமுடித்து ஐக்கியமானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் என்பதால் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் இடையே உறவும், மங்கல பொருட்கள் பரிவர்த்தனையும் நெடுங்காலமாக இருந்து வந்தது. எனினும் பல காரணங்களால் அவ்வழக்கம் இடையில் நின்று போனது.

பின்னர் இரு ஊர் பக்தர்களின் முயற்சியால் கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் சித்திரை தேருக்கு முதல் நாள் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்தும், ஸ்ரீவில்லிப்புத்தூர் தேரோட்டத்திற்கு முதல் நாள் ஸ்ரீரங்கத்தில் இருந்தும் மங்கலப்பொருட்கள் பரிவர்த்தனை நடந்து வருகிறது.

மங்கல பொருட்கள்

இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நேற்று காலை 6.30 மணியளவில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஆண்டாள் அணிந்த மாலை, பட்டு வஸ்திரங்கள், மலர்கள் மற்றும் இலைகளால் செய்யப்பட்ட கிளிகள், பழங்கள் உள்ளிட்ட மங்கல பொருட்கள் எடுத்து வரப்பட்டன. அவை ரெங்க விலாச மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.

பின்னர் அவை மேளதாளத்துடன் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. தொடர்ந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி நாகராஜன், ரமேஷ் பட்டர், சுதர்சன் பட்டர் உள்ளிட்ட குழுவினர் வஸ்திர மரியாதையை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணு ஸ்ரீனிவாசன், இணைஆணையர் ஜெயராமன், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர், அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகளிடம் அதனை அளித்தனர்.

இன்று சித்திரை தேரோட்டத்தின் போது தேரில் எழுந்தருளும் நம்பெருமாள், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை மற்றும் வஸ்திரங்களை அணிந்து தேரோட்டம் கண்டருளுகிறார். 

Next Story