நெல்லையில் வெவ்வேறு விபத்துகளில் காயம் அடைந்த 2 பேர் சாவு


நெல்லையில் வெவ்வேறு விபத்துகளில் காயம் அடைந்த 2 பேர் சாவு
x
தினத்தந்தி 12 May 2018 8:45 PM GMT (Updated: 12 May 2018 8:31 PM GMT)

நெல்லையில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் காயம் அடைந்த 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

நெல்லை, 

நெல்லையில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் காயம் அடைந்த 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

விவசாயி

நெல்லை பேட்டை சுந்தரவிநாயகர் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 52). விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாலை தனது மோட்டார் சைக்கிளில் நெல்லை டவுனை நோக்கி வந்து கொண்டு இருந்தார். தொண்டர் சன்னதி அருகே சென்று கொண்டு இருந்த போது, தனியார் பஸ்சும், மாரியப்பன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இதில் படுகாயம் அடைந்த மாரியப்பன் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இரவில் மாரியப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

பாளையங்கோட்டை அருகே உள்ள பாறைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் பேச்சியம்மாள் (60). சம்பவத்தன்று இவரை, அவரது மகன் முருகன் என்பவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றி பாளையங்கோட்டையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தார். சிகிச்சை முடிந்ததும் வீட்டுக்கு அழைத்து சென்றார். அரியகுளம் அருகே சென்று கொண்டு இருந்த போது, மோட்டார் சைக்கிளில் இருந்து பேச்சியம்மாள் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பேச்சியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story