“மோடி அலை ஓய்ந்துவிட்டது; ராகுல் காந்தி அலை வீசுகிறது” திருநாவுக்கரசர் பேச்சு


“மோடி அலை ஓய்ந்துவிட்டது; ராகுல் காந்தி அலை வீசுகிறது” திருநாவுக்கரசர் பேச்சு
x
தினத்தந்தி 12 May 2018 11:00 PM GMT (Updated: 12 May 2018 8:46 PM GMT)

“பிரதமர் மோடி அலை ஓய்ந்துவிட்டது; காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அலை வீசுகிறது” என்று காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசினார்.

கருங்கல்,

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் திக்கணங்கோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

எம்.எல்.ஏ.க்கள் வசந்தகுமார், பிரின்ஸ், விஜயதரணி, குமரி கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் வட்டார தலைவர்கள், நகர தலைவர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்தியில் சிறுபான்மை, தலித் மக்களுக்கு விரோதமான ஆட்சி நடந்து வருகிறது. பிரதமர் மோடி அலை என்றார்கள்.

ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக பொறுப்பு ஏற்றதும் மோடி அலை ஓய்ந்துவிட்டது. இப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அலை வீசுகிறது. ஊர் ஊராக சென்று பொய்யான தகவலை கூறும் பிரதமருக்கு, ஓடோடி சென்று பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக ராகுல் காந்தியை கட்சியின் தலைவராக சோனியாகாந்தி ஆக்கியுள்ளார்.

சந்திரபாபுநாயுடு, சந்திரசேகரராவ், மம்தா பானர்ஜி, லாலு பிரசாத் என்று பல தலைவர்கள் மத்திய அரசை எதிர்த்தாலும், அவர்கள் கட்சி எல்லாம் மாநில கட்சிகள்தான். பா.ஜனதாவை வீழ்த்தும் வல்லமை படைத்தது காங்கிரஸ் மட்டும்தான்.

3-வது, 4-வது அணிகள் எல்லாம் வெற்றி பெற போவது இல்லை. ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை. எப்போது எல்லாம் 3-வது அணி ஆட்சி அமைத்தார்களோ அவர்கள் எல்லாம் 5 ஆண்டுகள் நீடித்தது கிடையாது. பா.ஜனதாவுக்கு மாற்று காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும்தான்.

கர்நாடக தேர்தலில் நம்பிக்கையோடு இருக்கிறோம். அங்கு மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும்.

ஆட்சிக்கு வந்த 100 நாளில், ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடுவதாக மோடி சொன்னார். கருப்பு பணம் வெளிநாட்டில் இருந்து பின்னால் வரட்டும், முதலில் மோடியை வெளிநாட்டில் இருந்து நம் நாட்டுக்கு அழைத்து வாருங்கள் என பொதுமக்கள் கூறுகிறார்கள்.

ஏப்ரல், மே மாதத்தில் வர வேண்டிய நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வருகிற டிசம்பர் மாதத்தில் வரலாம்.

தமிழகத்தை பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் கூட்டணி தேவைதான். எந்த கட்சியோடும் ஆயுட்கால கூட்டணி கிடையாது. எப்போதும் கூட்டணியில் குறைவாகத்தான் தொகுதிகளை பெறுவோம் என்றும் கிடையாது.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவார் என்றால் அவருக்கு ஆதரவாக செயல்படுவோம். எப்போதும், அதையே செய்வோம் என்று கிடையாது. நான் தமிழக முதல்-அமைச்சராக வர வேண்டும் என்று இல்லை. காமராஜரின் தொண்டர் முதல்-அமைச்சராக வர வேண்டும். அது அடுத்த தேர்தல் அல்லது 10 ஆண்டுகளுக்கு பிறகு வரலாம்.

இவ்வாறு திருநாவுக்கரசர் பேசினார்.

கூட்டத்தில், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர்கள் ராபர்ட் புரூஸ், கண்ணாட்டுவிளை பாலையா, ராஜகோபால், மாநில மீனவர் அணி தலைவர் ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story