திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 5 பேர் மீது வழக்கு


திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 12 May 2018 9:21 PM GMT (Updated: 12 May 2018 9:21 PM GMT)

திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் அருகே உள்ள பழைய வெண்மனம்புதூர் மகாத்மாகாந்தி நகரை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 38). தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் ஜானகிராமன் வேலையின் காரணமாக கடம்பத்தூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

வெண்மனம்புதூர் அம்மாநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த வெண்மணம்புதூரை சேர்ந்த வீரேஷ், அவரது நண்பர்களான கன்னிமாநகரை சேர்ந்த தினேஷ், அம்பேத்கர் நகரை சேர்ந்த மோகன்ராஜ் உள்பட 5 பேர் மதுபோதையில் ஜானகிராமனிடம் தகராறில் ஈடுபட்டனர்.

5 பேர் மீது வழக்கு

அப்போது அவர்கள் அங்கிருந்த பீர்பாட்டிலால் ஜானகிராமனின் காதில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச்சென்று விட்டனர். இதில் அவருக்கு காதில் பலத்த காயம் ஏற்பட்டு கிழிந்து தொங்கியது. இதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஜானகிராமன் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வீரேஷ், தினேஷ், மோகன்ராஜ் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். 

Next Story