செங்குன்றம் அருகே கழுத்தை அறுத்து மனைவி கொலை போலீசுக்கு பயந்து கணவர் தற்கொலை


செங்குன்றம் அருகே கழுத்தை அறுத்து மனைவி கொலை போலீசுக்கு பயந்து கணவர் தற்கொலை
x
தினத்தந்தி 12 May 2018 9:41 PM GMT (Updated: 12 May 2018 9:41 PM GMT)

செங்குன்றம் அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவர், போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார்.

செங்குன்றம்,

சென்னை செங்குன்றத்தை அடுத்த சென்றம்பாக்கம் எம்.ஜி.நகரை சேர்ந்தவர் டேனியல் (வயது 48). தனியார் கியாஸ் குடோனில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி அம்மு (45). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களின் மகன் தர்மதுரை (20). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

அம்முக்கு சிறுநீரகத்தில் கட்டி இருந்து வந்தது. இதனால் அவர் சமீபகாலமாக அவதிப்பட்டு வந்தார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதை தன் மகனிடமும், உறவினர்களிடமும் சொல்லி அம்மு வருத்தம் அடைந்தார்.

கழுத்தை அறுத்து கொலை

இந்த நிலையில் தர்மதுரை நேற்று வழக்கம் போல் காலையில் வேலைக்கு சென்று விட்டார். டேனியல் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். டேனியல் நேற்று தன் மனைவியை தாம்பத்திய உறவுக்கு அழைத்ததாகவும், அதற்கு அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரத்தில் சமையல் அறையில் இருந்த கத்தியால் அம்முவின் கழுத்தை டேனியல் அறுத்தார். இதில் ரத்தவெள்ளத்தில் அம்மு அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

தற்கொலை

அதன்பிறகுதான் தான் மிகப்பெரிய தவறு செய்து விட்டதாக டேனியல் உணர்ந்தார். போலீசார் வந்தால் தன்னை கைது செய்து விடுவார்களோ என அஞ்சினார். பின்னர் போலீசுக்கு பயந்து படுக்கை அறைக்கு சென்று டேனியல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தர்மதுரை வேலையை முடித்து விட்டு மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது தன் தாய் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தந்தையை தேடிய போது அவர் தூக்குப்போட்டு இறந்து கிடந்ததால் திடுக்கிட்டார்.

போலீஸ் விசாரணை

இது குறித்து செங்குன்றம் போலீசுக்கு தர்மதுரை தகவல் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் 2 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story