15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சென்னையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு கலெக்டர் உத்தரவு


15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சென்னையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 12 May 2018 9:53 PM GMT (Updated: 12 May 2018 9:53 PM GMT)

சென்னையில் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் 15-ந்தேதி(நாளை மறுநாள்) முதல் 18-ந்தேதி வரை ஆய்வு செய்ய கலெக்டர் அன்புச்செல்வன் உத்தரவிட்டு உள்ளார்.

சென்னை, 

பள்ளிக்கூட வாகனங்களை முறையான அங்கீகாரம் பெற்றுத்தான் இயக்க வேண்டும், பள்ளி வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் உரிய ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும், பெயிண்ட் குறிப்பிட்ட நிறத்தில்தான் இருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

இந்தநிலையில் தற்போது கோடை விடுமுறை என்பதால் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களை ஆய்வு செய்ய சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் உத்தரவிட்டு உள்ளார்.

கலெக்டர் உத்தரவு

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மோட்டார் வாகனம் (பள்ளி பஸ்கள் ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடு) சிறப்பு விதிகள் படி, அனைத்து பள்ளி வாகனங்கள் சாலை பாதுகாப்பு குறித்து தண்டையார்பேட்டை மற்றும் எழும்பூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர், போலீஸ் உதவி ஆணையர் மற்றும் கல்வித்துறை அலுவலர் உடன் இணைந்து வாகன ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, வருகிற (மே) 15-ந்தேதி (நாளை மறுநாள்) கொளத்தூர் டி.ஆர்.ஜெ. ஆஸ்பத்திரி பின்புறத்தில் 226 வாகனங்களும், 16-ந்தேதி சேத்துப்பட்டு எம்.சி.சி. பள்ளி வளாகத்தில் 56 வாகனங்களும், நந்தனம் கலைக்கல்லூரி வளாகத்தில் 139 வாகனங்களும், 17-ந்தேதி கடற்கரை சாலை அங்காள பரமேஸ்வரி கோவில் அருகே 23 வாகனங்களும், 18-ந்தேதி ராயபுரம் செட்டிநாடு வித்யாசரம் பள்ளி வளாகத்தில் 185 வாகனங்களும் ஆய்வு செய்யப்படுகின்றன.

வேறு ஒரு நாளில்...

ஆய்வில் பள்ளி நிர்வாகத்தினர் தங்கள் பள்ளியில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஆய்வு செய்யப்பட்ட வாகனத்தின் முகப்பில் ஆலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டிடவும், இந்த ஆய்வில் குறைபாடுள்ள வாகனங்களையும், ஆய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களையும் வேறு ஒரு நாளில் ஆய்வு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Next Story