திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 13 May 2018 10:30 PM GMT (Updated: 13 May 2018 7:16 PM GMT)

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழகத்தின் முக்கிய ஆன்மிக ஸ்தலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இங்கு அதிகளவில் வெளிநாட்டு பக்தர்களும் வந்து செல்கின்றனர்.

இக்கோவிலின் சிறப்பு அம்சமாக கார்த்திகை தீபத்திருவிழா அன்று திருவண்ணாமலை நகரமே மக்கள் வெள்ளத்தில் மிதக்கும். லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு சாமி தரிசனம் செய்வார்கள். திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மலையை பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

மேலும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது கோடை காலம் என்பதால் பலர் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. எனினும் நேற்று விடுமுறை தினம் என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அவர்கள் கட்டண தரிசனம் வழி மற்றும் பொது தரிசன வழியாக வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பள்ளி விடுமுறை என்பதால் பலர் தங்களது குழந்தைகளையும் திருவண்ணாமலை கோவிலுக்கு அழைத்து வந்திருந்தனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் சார்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருந்தது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Next Story