மூதாட்டி கொலை வழக்கில் தலைமறைவானவர்களை பிடிக்க உறவினர் வீடுகளில் தேடுதல் போலீசார் தீவிரம்


மூதாட்டி கொலை வழக்கில் தலைமறைவானவர்களை பிடிக்க உறவினர் வீடுகளில் தேடுதல் போலீசார் தீவிரம்
x
தினத்தந்தி 13 May 2018 10:45 PM GMT (Updated: 13 May 2018 7:20 PM GMT)

போளூர் அருகே குழந்தை கடத்தல் கும்பல் என கருதி மூதாட்டியை கொன்ற வழக்கில் தலைமறைவானவர்களை பிடிக்க உறவினர் வீடுகளில் போலீசார் தேடி வருகின்றனர்.

போளூர்,

போளூர் அருகே களியம் என்ற கிராமத்தில் கடந்த 9-ந் தேதி குல தெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட வந்தபோது சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்த ருக்மணி அம்மாள் (வயது 65), அவரது உறவினர் மோகன்குமார் உள்பட 5 பேர் குழந்தை கடத்தல் கும்பல் எனக்கருதி பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ருக்மணி அம்மாள் பரிதாபமாக இறந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து போளூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து இதுவரை 36 பேரை கைது செய்துள்ளனர்.

தாக்குதல் சம்பந்தமாக போலீசாருக்கு கிடைத்த வீடியோ காட்சிகளை ஆதாரமாக கொண்டு இதில் தொடர்புடையவர்களை வீடு, வீடாக சல்லடை போட்டு தேடி வருகின்றனர். போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து களியம், தம்புகொட்டான்பாறை, ஜம்பங்கிபுரம், தானியார் உள்பட பல கிராமத்தினர் வீட்டைப் பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர். சில வீடுகளில் பெண்கள் மட்டுமே உள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரையும் விடப்போவதில்லை என்று திருவண்ணாமலை மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் போலீசாருக்கு பயந்து நேற்று 4-வது நாளாக கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

இந்த நிலையில் பொதுமக்களால் தாக்கப்பட்ட மோகன்குமார் போளூர் போலீஸ் நிலையம் சென்று விசாரணை குறித்து கேட்டறிந்தார்.

தற்போது தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தி உள்ளனர். அதன்படி களியம் உள்பட தாக்குதல் நடத்திய கிராம மக்களின் விவரங்களை சேகரித்து யாரெல்லாம் தலைமறைவாக உள்ளனர் என்ற பட்டியலை தயாரித்து வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் இந்த பட்டியலை வைத்து இவர்களின் உறவினர்கள் வீடுகள் எங்கெங்கு உள்ளது என்ற விவரத்தையும் சேகரித்து வருகின்றனர்.

இக்கிராம மக்களிடம் பெண் கொடுத்தோர், பெண் எடுத்தோர் என அவர்களின் பட்டியலும் தயார் செய்யப்பட்டு வேலூர், திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “எங்களது விசாரணை வளையத்துக்குள் 51 பேர் உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர். 

Next Story