ஸ்ரீபெரும்புதூர் அருகே மின்சாரம் தாக்கி தனியார் நிறுவன ஊழியர் சாவு, உறவினர்கள் மறியல்


ஸ்ரீபெரும்புதூர் அருகே மின்சாரம் தாக்கி தனியார் நிறுவன ஊழியர் சாவு, உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 13 May 2018 9:30 PM GMT (Updated: 13 May 2018 7:43 PM GMT)

ஸ்ரீபெரும்புதூர் அருகே மின்சாரம் தாக்கி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார். வேலுவின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பரமாத்மா. இவரது மகன் வேலு (வயது 27). இவர் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த போந்தூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று பகல் 1 மணியளவில் நிறுவனம் அருகே உள்ள பனைமரத்தில் ஏறி நுங்கு பறிப்பதற்காக நிறுவனத்திற்கு உள்ளே சென்று அலுமினிய ஏணியை எடுத்துவந்தனர். நுங்கு பறித்து விட்டு ஏணியை எடுத்து சென்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஏணி, மேலே உள்ள மின்அழுத்த கம்பியில் பட்டது. இதில் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்த வேலுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். வேலுவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வேலுவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரி எதிரே மறியலில் ஈடுபட்டார்கள். தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்.

மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story