வான்பாக்கத்தில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு: பூமி பூஜையை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு


வான்பாக்கத்தில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு: பூமி பூஜையை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 May 2018 10:30 PM GMT (Updated: 13 May 2018 7:59 PM GMT)

வான்பாக்கத்தில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பூமி பூஜையை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் அடுத்த வான்பாக்கத்தில் தென்பெண்ணை ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்கப்பட இருக்கிறது. இதற்கு அந்த பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று, வான்பக்கத்தில் அரசு மணல் குவாரியை தொடங்கிடும் வகையில் பூமி பூஜை செய்திட, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அங்கு வந்தனர். இதுபற்றி அறிந்த வான்பாக்கம் கிராம மக்கள் ஒன்று திரண்டு வந்து, மணல் குவாரியை இங்கு செயல்படுத்த கூடாது என்று கூறி பூமி பூஜையை தடுத்து நிறுத்தி போராட்டம் செய்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இங்கு குவாரி அமைத்தால், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளிக்குமாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் பூமி பூஜையை அதிகாரிகள் போட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story