மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் என நம்பிக்கை உள்ளது ஜி.கே.வாசன் பேட்டி


மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் என நம்பிக்கை உள்ளது ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 13 May 2018 10:45 PM GMT (Updated: 13 May 2018 8:27 PM GMT)

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் என நம்பிக்கை உள்ளது என ஜி.கே.வாசன் கூறினார்.

ஆவுடையார்கோவில்,

காவிரி பிரச்சினையில் தமிழக மக்கள் நம்பிக்கை இழந்து இருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் இதற்கு மேலும் மத்திய அரசுக்கு கால அவகாசம் கொடுக்கக்கூடாது. மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும். இல்லையென்றால் வரும் தேர்தலில் மக்கள் முற்றுப்புள்ளி வைத்து விடுவார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் தனியார் நிறுவனம் வாபஸ் பெற்றிருப்பது, நெடுவாசல் போராட்டகாரர்களுக்கு வெற்றியை தந்துள்ளது.

மீனவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையில் எந்த தீர்வும் ஏற்படவில்லை. இலங்கையில் உள்ள படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி பிரச்சினையில் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் மக்களை வஞ்சிக்கின்றன. தமிழகத்தில் மணல் கடத்தல் செய்வது தேசத்துரோகம். இதில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு கடும் தண்டனை கொடு்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் ஆலங்குடிக்கு சென்ற ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறுகையில், நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒப்பந்தம் செய்த ஜெம் நிறுவனமே தற்போது அதில் இருந்து பின்வாங்கி உள்ளது.

மக்களின் வாழ்வாதாரமான குடிநீர், விவசாயம் மற்றும் சுகாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டங்களையும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் செயல்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

நாளை (இன்று) மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் என நம்புகிறோம்.

தமிழகத்திற்கு 4 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாக வழங்க உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குட்கா விவகாரத்தில் மக்களின் சந்தேகங்களை போக்க வேண்டியது மாநில அரசின் கடமை. தைல மரங்களுக்கு நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சக்கூடிய தன்மை இருப்பதால், வரும் காலங்களில் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் ஆபத்து ஏற்படும். எனவே அதனை தடுக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமையாகும். மணல் குவாரிகள் முறையாக, நியாயமாக நடத்தப்பட வேண்டும். என்றார். 

Next Story