உள்ளாட்சி தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும்: கவர்னர் கிரண்பெடிக்கு, பாரதீய ஜனதா கோரிக்கை


உள்ளாட்சி தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும்: கவர்னர் கிரண்பெடிக்கு, பாரதீய ஜனதா கோரிக்கை
x
தினத்தந்தி 13 May 2018 11:30 PM GMT (Updated: 13 May 2018 8:31 PM GMT)

உரிய அதிகாரிகளை நியமித்து உள்ளாட்சி தேர்தல் பணிகளை தொடங்கவேண்டும் என்று கவர்னர் கிரண்பெடிக்கு பாரதீய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

புதுச்சேரி,

பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்த நிலையில் முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தொடங்கிட வேண்டும். காங்கிரஸ் கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தனது தேர்தல் வாக்குறுதியில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவோம் எனக்கூறி ஆட்சி அதிகாரத்துக்கு வந்தது.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் அதற்கான எந்த பணியையும் தொடங்காமல் நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி வந்தது. புதுவைக்கு வருகை புரிந்த பிரதமர் நரேந்திரமோடி உள்ளாட்சி தேர்தலை நடத்த கிராம பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

உள்ளாட்சிக்கு தேர்தல் நடந்ததால் பஞ்சாயத்து ராஜ் மூலம் மத்திய அரசின் நிதி மாநில அரசுக்கு வரவேண்டியது பல நூறு கோடி ரூபாய் வராததால் புதுச்சேரி கிராம பகுதிகளில் முன்னேற்றம் தடைபட்டுள்ளது. எனவே மக்களின் நலன்கருதி உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.

மாநில அரசு உடனே தேர்தல் அதிகாரியை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி மாநில மக்கள் நலன்கருதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். தோல்வி பயத்தில் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் அரசுக்கு எதிராக உள்ளதால் தேர்தலை தடுக்க பல குறுக்கு வழியை கையாண்டு நாராயணசாமி நிறுத்த முயற்சி செய்வது தெரிகிறது.

கடந்த 50 ஆண்டுகளில் 2 முறை மட்டுமே உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதனால் ஏழை, நடுத்தர மக்களின் நலத்திட்டங்கள், கிராமப்புற மேம்பாடு முழுவதும் முடங்கி வந்தது. புதுவை கவர்னர் கிரண்பெடி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி உரிய தேர்தல் அதிகாரிகளை நியமித்து பணியை தொடங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடத்தாத மக்கள் விரோத காங்கிரஸ் அரசை மக்கள் தூக்கி எறிய வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.


Next Story