பத்மநாபசாமி கோவில் ரகசிய அறைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ரத யாத்திரை நாகர்கோவில் வந்தது


பத்மநாபசாமி கோவில் ரகசிய அறைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ரத யாத்திரை நாகர்கோவில் வந்தது
x
தினத்தந்தி 13 May 2018 10:45 PM GMT (Updated: 13 May 2018 9:12 PM GMT)

பத்மநாபசாமி கோவிலில் ரகசிய அறைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற ரத யாத்திரை நாகர்கோவில் வந்தது.

நாகர்கோவில்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் உள்ள ரகசிய அறைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்தும், கோவிலின் தனித்துவத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அகில பாரத ஸ்ரீபத்மநாபசாமி பக்தஜன சேவா சமிதி சார்பில் 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் ரத யாத்திரை கடந்த 6-ந்தேதி கேரள மாநிலம் காசர்கோட்டில் இருந்து தொடங்கியது.

கேரளா மற்றும் தமிழ்நாட்டில் 180 திருத்தலங்களை கடந்து ரத யாத்திரை நேற்று கன்னியாகுமரி வந்தது. பின்னர், அங்கிருந்து சாமிதோப்பு வழியாக நாகர்கோவிலுக்கு வந்தது.

10 லட்சம் பேரிடம் கையெழுத்து

இந்த ரத யாத்திரை குறித்து ஒருங்கிணைப்பாளர் உஷா பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பத்மநாபசாமி கோவிலில் உள்ள ரகசிய அறைகளை திறக்க கூடாது. கோவிலின் தனித்துவத்தை பாதுகாக்கவேண்டும். பத்மநாபசாமி கோவில் சொத்தாக கருதப்படுபவை அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. அதை திரும்ப பெற வேண்டும். கோவிலின் வழிபாட்டு முறைகளிலோ, பாரம்பரிய நடைமுறையிலோ எவ்வித அரசியல் தலையீடும் இருக்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற இந்த ரத யாத்திரை நடத்தப்படுகிறது.

கடந்த 6-ந்தேதி கேரள மாநிலம் காசர்கோட்டில் தொடங்கிய ரத யாத்திரை இன்று (அதாவது நேற்று) மாலை 4 மணி அளவில் பத்மநாபசாமி கோவில் கிழக்கு வாசல் முன்பாக நிறைவடைகிறது. இந்த யாத்திரையில் பெறப்பட்ட கையெழுத்துக்கள் அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லப்படும். ரத யாத்திரை நிறைவு விழாவில், பந்தள ராஜ குடும்பத்தினர், ஆன்மிக பெரியோர்கள் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அகில பாரத ஸ்ரீபத்மநாபசாமி பக்தஜன சேவா சமிதி தலைவர் மோகன்குமார், அறங்காவலர் சவுமியா, ஒருங்கிணைப்பாளர் ஹரிகரன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story