தேனி அருகே துணிகரம்: அரசு அதிகாரி வீட்டில் 25 பவுன் நகை-பணம் திருட்டு
தேனி அருகே அரசு அதிகாரி வீட்டில் 25 பவுன் நகை-பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அல்லிநகரம்,
தேனி அருகே உள்ள என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் ஜஸ்டின் சாந்தப்பா (வயது 50). இவர், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிரஸ்தாராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 10-ந் தேதி இவர், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் நாகர்கோவிலில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு சென்றனர். நேற்று ஜஸ்டின் சாந்தப்பா தனது வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது துணிகள், பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சத்து 27 ஆயிரத்து 500 திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அல்லிநகரம் போலீசில் ஜஸ்டின் சாந்தப்பா புகார் செய்தார்.
அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கலெக்டர் அலுவலக அதிகாரி வீட்டில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story