உல்லாஸ்நகர் மாநகராட்சி அலுவலகத்தில் கோப்புகளை திருடிய பா.ஜனதா கவுன்சிலர் கைது


உல்லாஸ்நகர் மாநகராட்சி அலுவலகத்தில் கோப்புகளை திருடிய பா.ஜனதா கவுன்சிலர் கைது
x
தினத்தந்தி 13 May 2018 10:30 PM GMT (Updated: 13 May 2018 10:18 PM GMT)

உல்லாஸ்நகர் மாநகராட்சி அலுவலகத்தில் கோப்புகளை திருடிய பா.ஜனதா கவுன்சிலர் கைது செய்யப்பட்டார். அவர் கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினார்.

அம்பர்நாத்,

உல்லாஸ்நகர் மாநகராட்சி அலுவலகத்தில் கோப்புகளை திருடிய பா.ஜனதா கவுன்சிலர் கைது செய்யப்பட்டார். அவர் கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினார்.

கோப்புகளை திருடிய கவுன்சிலர்

உல்லாஸ்நகர் மாநகராட்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வைக்கப் பட்டு இருந்த கோப்பு ஒன்று சமீபத்தில் மாயமானது. இதையடுத்து அதிகாரிகள் அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்த கோப்பை பா.ஜனதா கட்சியை சேர்ந்த கவுன்சிலர் பிரதீப் ராம்சந்தானி திருடிசெல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

சம்பவத்தன்று பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வைத்து மாநகராட்சி அதிகாரி, ஒப்பந்ததாரர் மற்றும் பிரதீப் ராம்சந்தானி ஆகியோர் பேசி கொண்டு இருக்கின்றனர். சிறிது நேரத்தில் 3 பேரும் அலுவலகத்தை விட்டு வெளியே செல்கின்றனர். இந்தநிலையில் அலுவலகத்திற்கு தனியாக வரும் பிரதீப் ராம்சந்தானி அங்குள்ள லாக்கரை திறந்து கோப்பு ஒன்றை திருடி செல்கிறார். கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த இந்த காட்சிகளை பார்த்து மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

கைது

இந்தநிலையில் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த சம்பவம் குறித்து உல்லாஸ்நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து கோப்பை திருடிய கவுன்சிலர் பிரதீப் ராம்சந்தானியை கைது செய்தனர்.

இதுகுறித்து உல்லாஸ்நகர் துணை போலீஸ் கமிஷனர் அங்கித் கோயல் கூறுகையில், கவுன்சிலரை கைது செய்து அவர் எதற்காக கோப்பை திருடினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

Next Story