காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட மற்றொரு பெண்ணின் உடல் மீட்பு


காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட மற்றொரு பெண்ணின் உடல் மீட்பு
x
தினத்தந்தி 13 May 2018 11:00 PM GMT (Updated: 13 May 2018 10:24 PM GMT)

கொடைக்கானல் அருகே காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட மற்றொரு பெண்ணின் உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

பெரும்பாறை, 

கொடைக்கானல் அருகே உள்ள பண்ணைக்காடு ஆலடிப்பட்டியை சேர்ந்தவர் ஆண்டவர். அவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது 55). நேற்று முன்தினம் இவர், தனது மகன் விஜயராகவன் (30) மற்றும் அதேபகுதியை சேர்ந்த சேதுராமன், அவருடைய மகள் வைஷ்ணவி (16), தேனி மாவட்டம் கண்டமனூரை சேர்ந்த அன்பு (எ) சேர்மலை மனைவி திவ்யா (25) ஆகியோருடன் காபி தோட்டத்துக்கு கூலி வேலைக்கு சென்றார்.

அந்த பகுதியில், நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையினால் மூலையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அவர்கள் 5 பேரும் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி வரும் போது, மூலையாறு தால்லோடை காட்டாற்றை கடந்து செல்ல முயன்றனர். அதில் சேதுராமன், வைஷ்ணவி, விஜயராகவன் ஆகிய 3 பேரும் கடந்து சென்று விட்டனர்.

திவ்யா, ஜெயலட்சுமி ஆகிய 2 பேரும் காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டனர். அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தண்ணீரில் மூழ்கி ஜெயலட்சுமி பலியாகி விட்டார். அவருடைய உடல் மீட்கப்பட்டது.

காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட திவ்யாவை நேற்று முன்தினம் இரவு வரை, கொடைக்கானல் தீயணைப்பு படையினர் தேடினர். இந்தநிலையில் நேற்று காலையில் தீயணைப்பு படையினர் மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மூலையாற்றில் கீவளம் என்னுமிடத்தில் திவ்யாவின் உடல் கரை ஒதுங்கியது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு சென்று திவ்யா உடலை மீட்டனர். இதைத்தொடர்ந்து உடலை கைப்பற்றிய தாண்டிக்குடி போலீசார், பிரேத பரிசோதனைக்காக பண்ணைக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த திவ்யாவுக்கு நிவேஷ் (6), சிவகார்த்திக் (2) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story