கர்நாடக சட்டசபை தேர்தல்; வி.வி.பேட் எந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்படுகின்றன


கர்நாடக சட்டசபை தேர்தல்; வி.வி.பேட் எந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்படுகின்றன
x
தினத்தந்தி 14 May 2018 10:30 PM GMT (Updated: 14 May 2018 7:30 PM GMT)

கர்நாடக சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வி.வி.பேட் எந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்படுகின்றன.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வி.வி.பேட் எந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்படுகின்றன. இதற்காக ஒரு தொகுதிக்கு ஒரு வாக்குச்சாவடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 12-ந் தேதி நடைபெற்றது. நாட்டிலேயே முதல் முறையாக இந்த தேர்தலில் அனைத்து தொகுதியிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் வி.வி.பேட் எந்திரமும் முழுமையான அளவில் பயன்படுத்தப்பட்டது. ஓட்டு எண்ணிக்கை இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவாகியுள்ள ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. அத்துடன் அதன் உண்மை தன்மையை நிரூபிக்கும் வகையில் ஒரு தொகுதிக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அளவில் வி.வி.பேட் எந்திரத்தில் பதிவான ஓட்டு களையும் எண்ண தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி ஒரு தொகுதிக்கு ஒரு வாக்குச்சாவடி தேர்வு செய்யப்படுகிறது. அதாவது ஒரு தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட வி.வி.பேட் எந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்படுகின்றன. வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த பணி நடைபெறும்.

அதில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகி இருக்கும் ஓட்டுகளும், வி.வி.பேட் எந்திரத்தில் பதிவாகியுள்ள ஓட்டுகளும் சரியாக தான் உள்ளது என்பதை இதன் மூலம் தெரியப்படுத்த இந்த நடவடிக்கையை தேர்தல் அதிகாரிகள் எடுத்துள்ளனர். குறிப்பாக மின்னணு வாக்கு எந்திரங்களில் தவறுகள் செய்ய முடியாது என்பதை நிரூபிக்கவே வி.வி.பேட் எந்திர ஓட்டுகள் எண்ணப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். வி.வி.பேட் எந்திரத்தில் யாருக்கு வாக்களித்தனர் என்பது காகிதத்தில் அச்சாகி இருக்கிறது என்பது குறிப் பிடத்தக்கது ஆகும்.

Next Story