பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த போதை ஆசாமிகள் கைது செய்யக்கோரி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகை


பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த போதை ஆசாமிகள் கைது செய்யக்கோரி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகை
x
தினத்தந்தி 14 May 2018 10:30 PM GMT (Updated: 14 May 2018 9:59 PM GMT)

செங்குன்றம் அருகே பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த போதை ஆசாமிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த அலமாதி எடப்பாளையம் எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்த 39 வயதுடைய ஒரு பெண் கணவருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை அந்த பெண் வீட்டின் அருகே உள்ள குளியலறையில் குளித்து கொண்டிருந்தார். அந்த குளியலறையின் அருகில் சென்னையை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான பாழடைந்த வீடு ஒன்று உள்ளது.

அங்கு இருந்த 6 பேர் அந்த பெண் குளிப்பதை நைசாக தங்களது செல்போனில் படம் பிடித்தனர். சத்தம் கேட்டு பார்த்தபோது அவர்கள் செல்போனில் படம் பிடிப்பதை கண்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து அவர் கூச்சலிட்டதால் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

அங்கு வந்த அந்த பெண்ணின் கணவர் 6 பேரையும் துரத்திச்சென்றார். அப்போது அந்த நபர்கள் பெண்ணின் கணவரை உருக்கட்டையால் தாக்கி விட்டு தப்பிச்சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் பெண்ணை ஆபாசமாக படம் பிடித்த 6 பேரையும் கைது செய்ய வேண்டும் எனக்கோரி சோழவரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததால் முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதுபற்றி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குளியலறைக்கு அருகே உள்ள பாழடைந்த வீட்டில் இருந்தது அதே பகுதியை சேர்ந்த முரளி, நரேஷ், சியாம், மனோ, ஸ்ரீதர் என்பவர்கள் உள்பட 6 பேர் என்பதும் அவர்கள் தினமும் அங்கு மது அருந்துவதும், கஞ்சா அடிப்பதுமான செயல்களில் ஈடுபட்டு வந்ததும், மதுபோதையில் அந்த பெண்ணை படம் பிடித்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே அவர்கள் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த பெண்ணின் கணவர் பாடியநல்லூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story