கிரானைட் குவாரிகளை நிரந்தரமாக மூட வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


கிரானைட் குவாரிகளை நிரந்தரமாக மூட வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 14 May 2018 10:45 PM GMT (Updated: 14 May 2018 10:10 PM GMT)

சித்தம்பூண்டி பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகளை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நாமக்கல்,

பரமத்திவேலூர் தாலுகா சித்தம்பூண்டி, சுள்ளிப்பாளையம், சிறுப்பூலாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

சுள்ளிப்பாளையம் கிராமத்தில் ஒரு கிரானைட் குவாரியும், அருகில் உள்ள சித்தம்பூண்டி கிராமத்தில் 3 கிரானைட் குவாரிகளும் உள்ளன. மேலும் பல குவாரிகள் புதிதாக தொடங்க விண்ணப்பம் செய்யப்பட்டு இருப்பதாக அறிகிறோம். இக்குவாரிகள் எங்களின் வாழ்வாதாரமான குடிநீர் மற்றும் விவசாயத்ை-யும், நிலத்தடி நீரையும் முற்றிலுமாக அழித்து விட்டன. இந்த குவாரிகளால் அங்குள்ள குடிநீரை குடிக்கும் மக்களுக்கும், கால்நடைகளுக்கும் பல்வேறு உடல்நல கோளாறுகள் ஏற்படுகிறது.

மேலும் கிரானைட் குவாரிகளில் வைக்கப்படும் சக்திவாய்ந்த வெடிகளால் அருகில் உள்ள எங்கள் வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டு விட்டன. கிரானைட் குவாரிகளில் கற்களை வெடி வைத்து எடுப்பதால், அதன் மருந்துகள் நிலத்தடிநீரில் கலந்து நிலத்தடி நீரை மாசுப்படுத்தி விட்டது. எனவே இயற்கை வளங்களையும், எங்கள் ஊர் மக்களையும் காக்க அரசு எங்கள் பகுதிகளில் செயல்படும் கிரானைட் குவாரிகளை நிரந்தரமாக மூட வேண்டும். மேலும் புதிதாக குவாரிகள் தொடங்க அனுமதி அளிக்கக்கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர். 

Next Story