தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த வாடிக்கையாளர்களுக்கு ரூ.100 கோடி தொகையை பெற்று தர வேண்டும்


தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த வாடிக்கையாளர்களுக்கு ரூ.100 கோடி தொகையை பெற்று தர வேண்டும்
x
தினத்தந்தி 14 May 2018 10:45 PM GMT (Updated: 14 May 2018 10:10 PM GMT)

தனியார் நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த ரூ.100 கோடி தொகையை வாடிக்கையாளர்களுக்கு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முகவர்கள் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் கொடுத்தனர். கூட்டத்தில் தனியார் நிறுவன நிறுவனத்தில் முகவர்களாக பணியாற்றி வந்த சுரேஷ், சின்னராசு, மாதவன், சங்கர் ஆகியோர் தலைமையில் நேற்று பெண் முகவர்கள் கிருஷ்ணகிரி கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

2006 முதல் மதுரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த தனியார் நிறுவனம், வாடிக்கையாளர்களிடம் இருந்து மாதத் தவணை, காலாண்டு, அரையாண்டு தவணைகள் மற்றும் டெபாசிட்டுகள் மூலம் நிதிகளைத் திரட்டி 63 மாத முடிவில், முதிர்வு தொகையுடன் உரிய நேரத்தில் வழங்கி வந்தனர். இதில், தமிழகம் முழுவதும் 12 லட்சம் வாடிக்கையாளர்களும், ஒரு லட்சத்து 15 முகவர்களும் இருந்தனர்.

இவர்களில், தமிழகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 1,200 கோடி ரூபாயும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 100 கோடி ரூபாயும் இந்நிறுவனம் வழங்க வேண்டும். இந்நிலையில், 2015-ம் ஆண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையால், இந்நிறுவனம் முடக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பணம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு நிறுவனத்தின் மீது வழங்குப்பதிவு செய்து நீதிமன்ற நடவடிக்கையில் ஈடுபட்டது.

முதலீட்டாளர்கள் தொடர்ந்திருந்த மற்றொரு வழக்கில் நிறுவனத்தை ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர்அலி அளித்த அறிக்கையில் அடிப்படையில் 2017-ம் அக். 11-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதி அரசர் பால்வசந்தகுமார் தலைமையிலான 9 பேர் கொண்ட நிர்வாக கமிட்டி அமைத்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. மேலும் இக்கமிட்டி நிறுவனத்தின் அனைத்து சொத்துக்களையும் விற்று முதலீட்டாளர்களுக்கு பணத்தை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

முதலீட்டாளர்களுக்கு பணத்தை விரைந்து அளிப்பதற்காக சென்னை உயர்நீதி மன்றம் நிர்வாக கமிட்டி அமைத்து பல மாதங்கள் ஆகியும் இது நாள் வரை வாடிக்கையாளர்களுக்கு பணம் வந்து சேரவில்லை. இதனால் இந்நிறுவனத்தின் முகவர்களாக உள்ள நாங்கள் முதலீட்டாளர்களின் கடுமையான கோபத்திற்கு ஆளாகியும், அடிதடி, கொலை மிரட்டல் போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

இந்தநிறுவனத்தில் பெண் முகவர்கள் அதிகமாக பணியாற்றி உள்ளனர். மேற்படி தொகை வழங்காத நிலையில் பல குடும்பங்களில் பல்வேறு பிரச்சினைகளினால் குடும்பங்களில் பிளவு ஏற்பட்டுள்ளது. எனவே முகவர்களாகிய நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். இதனால் எங்களின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.100 கோடியை பெற்று தர உரிய நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story