காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி இளைஞர் பெருமன்றத்தினர் சாலைமறியல்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி இளைஞர் பெருமன்றத்தினர் சாலைமறியல்
x
தினத்தந்தி 14 May 2018 11:00 PM GMT (Updated: 14 May 2018 10:11 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருச்சி பெரியார் சிலை அருகில் இளைஞர் பெருமன்றத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ ஆகிய திட்டங்களை கைவிட வேண்டும். ஆற்று மணல், தாது மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் மணல் கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் மாவட்டந்தோறும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

அதன்படி திருச்சி மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நேற்று காலை போராட்டம் நடத்துவதற்காக ஜங்ஷனில் இருந்து ஊர்வலமாக வந்தனர்.

பின்னர், திருச்சி மத்திய பஸ் நிலையம் தந்தை பெரியார் சிலை அருகில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மறியல் போராட்டத்தை ஏ.ஐ.டி.யு.சி. திருச்சி மாவட்ட தலைவர் சுரேஷ் தொடங்கி வைத்தார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.முருகேசன் தலைமை தாங்கினார். மணிகண்டம் ஒன்றிய பொறுப்பாளர் ராஜாமுகமது, மாநகர துணை செயலாளர் சரண்சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் திராவிடமணி வாழ்த்தி பேசினார்.

போராட்டத்தின்போது ஜங்ஷனில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்துக்கு அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சை மறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அதைத்தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்ட இளைஞர் பெருமன்றத்தினர் 15 பேரை திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

Next Story