நிரவ் மோடியின் வங்கிக்கடன் மோசடி வழக்கு: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் வங்கி அதிகாரிகளின் 4 பேர் பெயர்கள்


நிரவ் மோடியின் வங்கிக்கடன் மோசடி வழக்கு: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் வங்கி அதிகாரிகளின் 4 பேர் பெயர்கள்
x
தினத்தந்தி 14 May 2018 11:10 PM GMT (Updated: 14 May 2018 11:10 PM GMT)

சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் வங்கி அதிகாரிகளின் 4 பேர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

மும்பை,

நிரவ் மோடியின் வங்கிக்கடன் மோசடி வழக்கில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் வங்கி அதிகாரிகள் 4 பேரின் பெயர் இடம் பெற்றுள்ளது.

மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் மோசடியில் ஈடுபட்டார். அவர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்த நிலையில் நிரவ்மோடியும், அவருடைய குடும்பத்தினரும் வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. நேற்று மும்பை தனிக்கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

அதில், பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் முன்னாள் தலைவரும்(2015-17), தற்போது அலகாபாத் வங்கியின் தலைமை செயல் அதிகாரியாகவும் உள்ள உஷா அனந்தசுப்பிரமணியம், பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் நிர்வாக இயக்குனர்கள் கே.வி.பிரன்மாஜி ராவ், சஞ்சீவ் ‌ஷரண் மற்றும் பொதுமேலாளர்(சர்வதேச செயல்பாடு) நெஹல் அஹாத் ஆகிய 4 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.

இந்த மோசடியில் நிரவ் மோடி, அவருடைய சகோதரர் நிஷால் மோடி மற்றும் நிரவ் மோடி நிறுவனத்தின் நிர்வாகி சுபாஷ் பாரப் ஆகியோருக்கு இடையேயான தொடர்பு குறித்தும் விரிவாக கூறப்பட்டு உள்ளது. வங்கி மோசடியில் நிரவ் மோடியின் மாமா மெகுல் சோக் ஷியின் பங்களிப்பு பற்றி சி.பி.ஐ. அடுத்து தாக்கல் செய்யும் துணை குற்றப்பத்திரிகையில் இடம்பெறும் என்று சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story