பீர்பாட்டிலால் தாக்கி தொழிலாளியிடம் தங்கசங்கிலி பறிப்பு 4 மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு


பீர்பாட்டிலால் தாக்கி தொழிலாளியிடம் தங்கசங்கிலி பறிப்பு 4 மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 15 May 2018 8:30 PM GMT (Updated: 15 May 2018 3:23 PM GMT)

தூத்துக்குடியில் பீர் பாட்டிலால் தாக்கி தொழிலாளியிடம் தங்கசங்கிலியை பறித்து சென்ற 4 மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் பீர் பாட்டிலால் தாக்கி தொழிலாளியிடம் தங்கசங்கிலியை பறித்து சென்ற 4 மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பீர்பாட்டில் அடி

தூத்துக்குடி பெருமாள்புரம் 2–வது தெருவை சேர்ந்தவர் வேல்குமார்(வயது 31). இவர் தூத்துக்குடி வ.உ.சி.துறைமுக வளாகத்தில் சாக்கு தைக்கும் தொழிலாளியாக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவர் மோட்டார் சைக்கிளில் பணிக்கு சென்றார். தெற்கு பீச் ரோட்டில் சென்ற போது, அங்கு நின்று கொண்டு இருந்த 4 பேர் அவரை வழிமறித்தனர். அப்போது ஒருவர், தான் வைத்து இருந்த பீர் பாட்டிலால் அவரை தாக்கினார். இதில் அவருடைய உடலில் பட்ட பாட்டில் உடைந்து சிதறியதில், நிலைகுலைந்த அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரத்து 500 மற்றும் அரைப்பவுன் தங்கசங்கிலியையும் பறித்துக் கொண்டு அந்த 4 பேரும் தப்பி சென்று விட்டனர்.

மற்றொரு சம்பவம்

இதே போன்று தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த மோகன்தாஸ்காந்தி(47) என்பவர் 3–வது மைல் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் அவரை வழிமறித்தனர். பின்னர் அவரை மிரட்டி செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இந்த 2 சம்பவங்கள் குறித்த புகார்களின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தெர்மல் நகர் பகுதியிலும் ஒருவரிடம் 2 மர்ம ஆசாமிகள் செல்போனை பறித்து சென்ற சம்பவம் நடந்து உள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில், சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story