ரெயிலில் அடிபட்டு 4 வாலிபர்கள் பலி எதிரொலி தண்டவாள பகுதியில் தடுப்பு சுவர் கட்டப்படும்


ரெயிலில் அடிபட்டு 4 வாலிபர்கள் பலி எதிரொலி தண்டவாள பகுதியில் தடுப்பு சுவர் கட்டப்படும்
x
தினத்தந்தி 15 May 2018 11:07 PM GMT (Updated: 15 May 2018 11:07 PM GMT)

ரெயிலில் அடிபட்டு 4 வாலிபர்கள் பலியான சம்பவத்தை தொடர்ந்து, போரிவிலி - காந்திவிலி இடையே தண்டவாள பகுதியில் தடுப்பு சுவர் கட்டப்படும் என்று ரெயில்வே போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

மும்பை,

மும்பையில் போரிவிலி - காந்திவிலி இடையே உள்ள தண்டவாளத்தில் நேற்று முன்தினம் காலை தத்தா பிரசாத், சாய்பிரசாத், சாகர், மனோஜ் ஆகிய ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 வாலிபர்கள் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற போது ரெயில் மோதி பலியானதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து மேற்கு ரெயில்வே போலீஸ் துணை கமிஷனர் புருஷோத்தம் காரட் கூறியதாவது:-

போரிவிலி - காந்திவிலி இடையே தண்டவாளத்தையொட்டி குடியிருப்பு பகுதிகள் உள்ளன. அந்த பகுதியில் தடுப்பு சுவர் ஏதும் இல்லாததால் மின்சார ரெயில் சிக்னலில் நிற்கும் போது பயணிகள் கீழே இறங்கி தண்டவாளத்தை கடந்து வீட்டிற்கு செல்கின்றனர். எனவே அந்த பகுதியில் தடுப்பு சுவரை கட்ட ரெயில்வே வாரியத்திற்கு கடிதம் எழுதி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆண்டில் கடந்த 5 மாதத்தில் மும்பையில் நடந்த ரெயில் விபத்துகளில் 897 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 70 பேர் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற போது ரெயில் மோதி பலியானதாக ரெயில்வே போலீசார் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டு மும்பையில் ரெயில் விபத்துகளில் சிக்கி 3 ஆயிரத்து 202 பேர் பலியாகி இருந்தனர். இதில் 150 பேர் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற போது ரெயில் மோதி பலியானவர்கள் ஆவர். 

Next Story