நெல்லை மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வில் 95.15 சதவீதம் பேர் தேர்ச்சி மாணவர்களை விட மாணவிகளே அதிகம்


நெல்லை மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வில் 95.15 சதவீதம் பேர் தேர்ச்சி மாணவர்களை விட மாணவிகளே அதிகம்
x
தினத்தந்தி 16 May 2018 9:30 PM GMT (Updated: 16 May 2018 12:25 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வில் 95.15 சதவீத மாணவ–மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வில் 95.15 சதவீத மாணவ–மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

பிளஸ்–2 தேர்வு முடிவுகள்

நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவுரையின்படி, மாவட்ட கல்வி அலுவலர்கள் சின்னத்துரை(நெல்லை), ஜெயராஜ் (சேரன்மாதேவி) ஆகியோர் பிளஸ்–2 தேர்வு முடிவுகளை நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று காலை வெளியிட்டனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, சேரன்மாதேவி, தென்காசி என 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. நெல்லை கல்வி மாவட்டத்தில் 13 ஆயிரத்து 842 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 13 ஆயிரத்து 54 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தென்காசி கல்வி மாவட்டத்தில் 12 ஆயிரத்து 438 பேர் தேர்வு எழுதியதில், 11 ஆயிரத்து 838 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சேரன்மாதேவி கல்வி மாவட்டத்தில் 13 ஆயிரத்து 423 பேர் தேர்வு எழுதியதில் 10 ஆயிரத்து 980 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 37 ஆயிரத்து 703 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் மாணவர்கள் 16 ஆயிரத்து 242 பேர், மாணவிகள் 21 ஆயிரத்து 461 பேர். தேர்வு எழுதியவர்களில் 35 ஆயிரத்து 872 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மாணவர்கள் 15 ஆயிரத்து 103 பேர், மாணவிகள் 20 ஆயிரத்து 769 பேர்.

0.93 சதவீதம் குறைவு

இது 95.15 சதவீத தேர்ச்சி ஆகும். கடந்த ஆண்டு 96.08 சதவீத மாணவ–மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு 0.93 சதவீதம் குறைவு ஆகும். மாநில அளவில் நெல்லை மாவட்டம் 10–வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 7–வது இடத்தில் இருந்தது.

நெல்லை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்கள், தனியார், மாநகராட்சி, மெட்ரிக்குலேசன் பள்ளிக்கூடங்கள் என மொத்தம் 312 பள்ளிக்கூடங்கள் உள்ளன. இதில் 119 பள்ளிக்கூடங்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்று உள்ளன. இதில் அரசு பள்ளிகள் 13, ஒரு மாநகராட்சி பள்ளி, சமூக நலத்துறை பள்ளிகள் 2, தனியார் பள்ளிகள் 29, மெட்ரிக்குலேசன் பள்ளிகள் 74 ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அதிருப்தி

பிளஸ்–2 தேர்வு முடிவில் 2013–ம் ஆண்டு மாநில அளவில் 3–வது இடத்தில் இருந்த நெல்லை மாவட்டம் இந்த ஆண்டு 10 இடத்திற்கு சென்று இருப்பது மாணவ–மாணவிகள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளிக்கூடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவ–மாணவிகளின் பட்டியல் வெளியிடப்பட்டு அறிவிப்பு பலகைகளில் மதிப்பெண்களுடன் ஒட்டப்பட்டு இருந்தது. மாணவர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் மதிப்பெண் பட்டியல் அனுப்பப்பட்டதால், பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் கூட்டம் அதிகம் இல்லை. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மாணவர்கள் மட்டும் பள்ளிக்கூடங்களில் வந்து மதிப்பெண்களை பார்த்தனர். மேலும் மாணவர்கள் பலர் இணையதளம் மூலமும் மதிப்பெண்களை பார்த்தனர்.


Next Story