86 அரசு பள்ளிக்கூடங்களில் உயர் தொழில்நுட்ப கம்ப்யூட்டர் ஆய்வகம்


86 அரசு பள்ளிக்கூடங்களில் உயர் தொழில்நுட்ப கம்ப்யூட்டர் ஆய்வகம்
x
தினத்தந்தி 16 May 2018 8:30 PM GMT (Updated: 16 May 2018 2:46 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் உயர் தொழில்நுட்ப கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் உயர் தொழில்நுட்ப கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன.

கம்ப்யூட்டர் திறன் 

தமிழ்நாடு அரசு வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு போதிய கம்ப்யூட்டர் திறன்களை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உயர் தொழில் நுட்ப கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன.

அதன்படி ரூ.462 கோடியே 59 லட்சம் செலவில் தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 90 உயர்நிலைப்பள்ளிகளுக்கு தலா 10 கம்ப்யூட்டர்களும், 2 ஆயிரத்து 939 மேல்நிலைப்பள்ளிகளுக்கு தலா 20 கம்ப்யூட்டர்களும், அதனுடன் தொடர்புடைய இதர சாதனங்களும் வழங்கப்பட உள்ளன.

86 அரசு பள்ளிகள் 

இதனால் புதிய பாடத்திட்டங்களை மாணவ–மாணவிகள் எளிதில் படிப்பதற்கு வசதியாகவும், கம்ப்யூட்டர் திறனை வளர்க்கவும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 86 அரசு பள்ளிக்கூடங்களிலும் இந்த கம்ப்யூட்டர் ஆய்வகம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது. விரைவில் இந்த ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. 

Next Story