நடத்தையில் சந்தேகப்பட்டு கியாஸ் சிலிண்டரால் 3-வது மனைவியை அடித்துக்கொன்ற கணவர்


நடத்தையில் சந்தேகப்பட்டு கியாஸ் சிலிண்டரால் 3-வது மனைவியை அடித்துக்கொன்ற கணவர்
x
தினத்தந்தி 16 May 2018 11:15 PM GMT (Updated: 16 May 2018 7:43 PM GMT)

நடத்தையில் சந்தேகப்பட்டு கியாஸ் சிலிண்டரால் 3-வது மனைவியை அடித்துக்கொன்ற கணவர் போலீசில் சரண் அடைந்தார்.

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டை மெயின் ரோட்டை சேர்ந்தவர் பஷீர் அகமது(வயது 42). இவருக்கு கடந்த 1995-ம் ஆண்டு திருச்சியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.

இதன் காரணமாக விவாகரத்து ஏற்பட்டு அந்தப்பெண் தனது குழந்தையுடன் சென்று விட்டார். இதனை தொடர்ந்து பஷீர் அகமது கடந்த 2001-ம் ஆண்டு பெரம்பலுாரை சேர்ந்த ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டு அந்தப் பெண்ணும் விவாகரத்து பெற்று விட்டு தனது குழந்தையுடன் சென்று விட்டார்.

இந்த நிலையில் நண்பர் ஒருவரின் துக்க வீட்டிற்கு சென்று இருந்தபோது சாந்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்து மதத்தை சேர்ந்த சாந்தி, சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர். குடும்பத்தகராறு காரணமாக கணவருடன் விவாகரத்து பெற்று இரண்டு ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

உறவினர்கள் மூலமாக சாந்தியை, பஷீர் அகமது கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் சாந்தி இந்து மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறி விட்டார். தனது பெயரை பாத்திமா என்று மாற்றிக்கொண்டார். சாந்தியுடன், முதல் கணவர் மூலம் பிறந்த இரண்டு ஆண் குழந்தைகளும் இருந்து வந்தனர். இந்த நிலையில் பஷீர் அகமது மூலம் சாந்திக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு தற்போது 2 வயது ஆகிறது.

கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு பஷீர் அகமது வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்று விட்டார். வெளிநாடு சென்ற பின்னர் அவர் போன் மூலம் மனைவியுடன் பேசி வந்தார். அப்போது போனில் பேசும்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சாந்தியின் நடத்தையில் பஷீர் அகமது சந்தேகம் அடைந்து உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பஷீர் அகமது ஊருக்கு திரும்பி வந்தார். ஊரில் இருந்து வந்ததும் மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் சாந்தி என்கிற பாத்திமா கணவருடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி நாச்சியார்கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதுகுறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாத்திமா புகார் கொடுத்தார்.

போலீசாரும், உறவினர்களும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சமரசம் செய்து வைத்தனர். இதனைத்தொடர்ந்து பிரிந்து வாழ்ந்த இவர்கள் சேர்த்து வைக்கப்பட்டனர். இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது வழக்கம்போல் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த பஷீர் அகமது வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரை பாத்திமாவின் தலையில் தூக்கிப் போட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே பாத்திமா பரிதாபமாக இறந்தார்.

மனைவியை கொலை செய்த பின்னர் பஷீர் அகமது நேராக நாச்சியார்கோவில் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு சென்ற அவர், தனது மனைவியின் நடத்தையில் தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும், இதனால் அவரை தான் கொலை செய்துவிட்டதாகவும் கூறி சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து நாச்சியார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகவுரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு பாத்திமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாச்சியார்கோயில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story