குடிபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்திய தொழிலாளிக்கு 6 மாதம் சிறை


குடிபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்திய தொழிலாளிக்கு 6 மாதம் சிறை
x
தினத்தந்தி 16 May 2018 9:45 PM GMT (Updated: 16 May 2018 7:44 PM GMT)

குடிபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் விபத்தை ஏற்படுத்திய பனியன் தொழிலாளிக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

திருப்பூர்,

திருப்பூர் விஜயாபுரம் குரும்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ்(வயது 22). திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30–ந்தேதி, குடிபோதையில் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சிவா(21) மற்றும் அருண்(19) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் திருப்பூரில் இருந்து காங்கேயம் ரோட்டில் வேகமாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது காங்கேயம் ரோடு வேலன் ஓட்டல் அருகில் சென்ற போது, எதிரே வந்த காங்கேயம் ரோடு கதிர்நகர் பகுதியை சேர்ந்த ராவணேஷ்வரன்(53) என்பவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் மோட்டார் சைக்கிள்களில் வந்த சத்தியராஜ், சிவா, அருண் ஆகியோருக்கு பலத்த காயமும் எதிரே வந்த ராவணேஷ்வரனுக்கு லேசான காயமும் ஏற்பட்டது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த சத்தியராஜ், சிவா, அருண் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிவா, அருண் ஆகியோரை மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருண் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குடிபோதையில் வாகனத்தை ஓட்டி சென்று உயிரிழப்பை ஏற்படுத்தியதாக அருணின் நண்பரான சத்தியராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் ஜே.எம்.2 மாஜிஸ்திரேட்டு பழனி முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சத்தியராஜுக்கு 6 மாதம் சிறைத்தண்டனையும், ரூ.4500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


Next Story