நாடு முழுவதும் மக்களிடம் பா.ஜ.க. வுக்கு ஆதரவாக ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


நாடு முழுவதும் மக்களிடம் பா.ஜ.க. வுக்கு ஆதரவாக ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 16 May 2018 11:00 PM GMT (Updated: 16 May 2018 7:45 PM GMT)

நாடு முழுவதும் தற்போது மக்களிடம் பா.ஜ.க. வுக்கு ஆதரவாக ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று திருச்சியில் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

செம்பட்டு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. அங்கு பா.ஜ.க. நிச்சயம் ஆட்சி அமைக்கும். ஏனென்றால் மக்கள் காங்கிரசுக்கு எதிராக வாக்களித்து இருக்கிறார்கள். அங்கு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தான் தமிழகத்துடனான உறவு இன்னும் சீராக பாதுகாக்கப்படும். அதுமட்டுமல்ல, காவிரி பிரச்சினையும் இல்லாமல் இருக்க வேண்டுமானல் பா.ஜ.க. ஆட்சி அமைய வேண்டும். மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் குமாரசாமி தேர்தல் அறிக்கையிலேயே காவிரி அவர்களின் உரிமை என்பதை போலவும், காவிரியை தமிழகம் சொந்தம் கொண்டாட முடியாது என்பதை போலவும் கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்.

அங்கு 18 மாதம் மூடி வைக்கப்பட்டு இருந்த திருவள்ளூவர் சிலையை எடியூரப்பா தான் திறந்து வைத்தார். தமிழகத்துக்கு 5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும் என்று சித்தராமையாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர் திறந்து விட்டாரா?. அதை கேட்க இங்கு யாரும் இல்லை. காவிரி நதிநீர் வரைவு திட்டம் வர இருக்கிறது. இதன் மூலம் தமிழகத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். 2 மாநிலங்கள் நதிநீரை பங்கிட்டு கொள்ளும்போது எந்த மாநிலமும் வஞ்சிக்கப்படக்கூடாது என்பதில் மத்திய அரசு கவனமாக இருக்கிறது.

தி.மு.க., காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, அவர்கள் காவிரி விவகாரத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கர்நாடகா தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஓட்டு சதவீதம் குறைந்து விட்டதாக சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். ஓட்டு சதவீதத்தைவிட மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பது தான் முக்கியம்.

ஒட்டு மொத்த மக்களின் மனநிலையும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவே இருந்து உள்ளது. மிகப்பெரிய கூட்டணி இல்லாமல் எதிர்மறை விமர்சனங்களை தாண்டி வெற்றி பெற்றுள்ளது. நாடு முழுவதும் தற்போது மக்களிடம் பா.ஜ.க. வுக்கு ஆதரவாக ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story