மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை நாராயணசாமி பேட்டி


மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 16 May 2018 10:30 PM GMT (Updated: 16 May 2018 8:32 PM GMT)

புதுச்சேரியில் மாணவர்களின் தேர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாராயணசாமி உறுதி அளித்தார்.

புதுச்சேரி,

பிளஸ்–2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. புதுவையில் தேர்ச்சி விவரங்களை முதல்–அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

பிளஸ்–2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க கவனம் செலுத்த வேண்டி உள்ளது.

பெற்றோர், ஆசிரியர், மாணவர்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு குழு ஆரம்பிக்கப்பட்டு அது செயல்பட ஆரம்பித்துள்ளது. மாணவர்களுக்கு பள்ளிக்கூட நேரம் தவிர கூடுதல் நேரம் பயிற்சி கொடுத்து தேர்ச்சியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.

மாணவர்கள் தேர்ச்சியை அதிகரிக்க சரியான ஒருங்கிணைப்பு வேண்டும். புதுச்சேரி பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி கடந்த ஆண்டைவிட 0.51 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் காரைக்கால் பகுதியில் கடந்த ஆண்டைவிட 2.19 சதவீதம் அதிகரித்துள்ளது.

கொரவள்ளி மேட்டில் உள்ள அரசுப்பள்ளி 100 சதவீத வெற்றியை பெற்றுள்ளது. கடந்த காலங்களில் சரியாக செயல்படாத அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்–அமைச்சர் நாராயணசாமி, இதுகுறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்றார்.


Next Story