அவுரங்காபாத் வன்முறை சம்பவம் 2 கவுன்சிலர்கள் அதிரடி கைது


அவுரங்காபாத் வன்முறை சம்பவம் 2 கவுன்சிலர்கள் அதிரடி கைது
x
தினத்தந்தி 16 May 2018 9:25 PM GMT (Updated: 16 May 2018 9:25 PM GMT)

அவுரங்காபாத் வன்முறை சம்பவம் தொடர்பாக சிவசேனா கவுன்சிலர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

 எம்.ஐ.எம். கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ஒருவரும் இதன் தொடர்ச்சியாக அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

அவுரங்காபாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையில் முடிந்தது. இதில் வாலிபர் உள்பட 2 பேர் பலியானார்கள். மேலும் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள், கடைகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. போலீசார் வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டினர்.

மேலும் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டது. மேலும் முடக்கி வைக்கப்பட்டு இருந்த இணையதள சேவையும் தொடங்கப்பட்டது. இதேபோல போலீசார் இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக அவுரங்காபாத் சிவாஜிநகரை சேர்ந்த சிவசேனா கவுன்சிலர் ராஜேந்திர ஜன்லாலை கைது செய்துள்ளனர். வியாபாரி ஒருவர் கொடுத்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வியாபாரி கொடுத்த வீடியோ ஆதாரத்தில் கவுன்சிலர் வாகனங்கள், கடைகளுக்கு தீ வைக்கும் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுதவிர வன்முறை சம்பவம் தொடர்பாக போலீசார் எம்.ஐ.எம். கட்சியை சேர்ந்த பெரோஸ் கான் என்ற கவுன்சிலரையும் பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டனர்.

இதற்கிடையேசிவசேனா கவுன்சிலர் கைது செய்யப்பட்டதால் அவுரங்காபாத் போலீஸ் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிவசேனா, பா.ஜனதா கட்சியினர் திரண்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. 

Next Story