தடுப்பு சுவரில் கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி படுகாயமடைந்த 6 பேருக்கு தீவிர சிகிச்சை


தடுப்பு சுவரில் கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி படுகாயமடைந்த 6 பேருக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 17 May 2018 10:30 PM GMT (Updated: 17 May 2018 9:46 PM GMT)

தர்மபுரி அருகே தடுப்புசுவரில் கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார். இந்த விபத்தில் படுகாயமடைந்த 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள கதிராம்பட்டியை சேர்ந்தவர் பார்த்திபன்(வயது 28). தனியார் நிறுவன ஊழியர். இவருடைய நண்பர் சசிக்குமார்(28). இவர்கள் 2 பேரும் மனைவி, குழந்தைகளுடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தேனி மற்றும் கொடைக்கானலுக்கு காரில் சுற்றுலா சென்றனர். பின்னர் அங்கிருந்து காரில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

இவர்கள் வந்த கார் நேற்று அதிகாலை 5 மணிக்கு தர்மபுரியை அடுத்த சோகத்தூர் அருகே வந்து கொண்டிருந்தது. காரை பார்த்திபன் ஓட்டினார். இந்த கார் எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் உள்ள சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

உயிரிழப்பு

இந்த விபத்தில் காரில் வந்த பார்த்திபன் அவருடைய மனைவி அனிதா, மகள் கிரிஷ்னிதா மற்றும் சசிக்குமார், அவருடைய மனைவி முல்லைக்கொடி, மகள்கள் கவிதாஸ்ரீ, யுவிதாஸ்ரீ ஆகிய 7 பேரும் படுகாயமடைந்தனர். இவர்களை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது பார்த்திபன் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. படுகாயமடைந்த மற்ற 6 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story