டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி ஜூலை 20-ந் தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்தம்


டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி ஜூலை 20-ந் தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 17 May 2018 10:30 PM GMT (Updated: 17 May 2018 9:46 PM GMT)

டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி வருகிற ஜூலை மாதம் 20-ந் தேதி முதல் நாடு முழுவதும் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற இருப்பதாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறினார்.

நாமக்கல்,

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலையை அடிக்கடி உயர்த்தி வருகிறது. இதற்கு அரசியல் கட்சியினர் மற்றும் லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரசின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று புதுடெல்லியில் அதன் தலைவர் மிட்டல் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் தினசரி ஏற்றம் கண்டு வரும் டீசல் விலையை குறைக்க வேண்டும், வாகனங்களுக்கு 3-ம் நபர் காப்பீட்டு தொகைக்கான பிரீமியத்தை குறைக்க வேண்டும், சுங்க கட்டணம் வசூலிப்பதை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜூலை மாதம் 20-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்து உள்ளது. இது குறித்து சம்மேளனத்தின் தலைவர் குமாரசாமி கூறியதாவது:-

ஏற்கனவே லாரி தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தினசரி டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவதால், கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறோம். எனவே லாரி உரிமையாளர்களின் முக்கியமான 3 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜூலை மாதம் 20-ந் தேதி முதல் காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முழுமையாக பங்கேற்கும். அவ்வாறு லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் 4½ லட்சம் லாரிகள் ஓடாது.

இவ்வாறு அவர் கூறினார் 

Next Story