பால்வள துணைப்பதிவாளர் அலுவலகம் முற்றுகை பூட்டு போட்டதால் பரபரப்பு


பால்வள துணைப்பதிவாளர் அலுவலகம் முற்றுகை பூட்டு போட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 May 2018 10:45 PM GMT (Updated: 17 May 2018 9:47 PM GMT)

பொய்கை பால்வள துணைப்பதிவாளர் அலுவலகத்தை கறவை மாட்டின் உரிமையாளர்கள் முற்றுகையிட்டு பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அணைக்கட்டு,

அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ்கொத்தூரில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளது. இதில் 200 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்கத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் லிட்டர் பால் ஆவினுக்கு அனுப்பப்படுகிறது.

வாரத்துக்கு ஒருமுறை பில் பணம் வழங்கவேண்டும். ஆனால் 9 வாரங்களாக பில் பணம் வழங்கப்படவில்லை. ஆவினில் இருந்து ரூ.30 லட்சத்துக்கு பில் பணம் பாக்கி வரவேண்டியுள்ளது. கூட்டுறவு பால் சங்கத்துக்கு 2-ம் கட்டத் தேர்தல் நடந்தது. அப்போது தலைவராக வேலு என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.

தலைவர் பெயரிலோ அல்லது கூட்டுறவு சங்க தனி அலுவலர் பெயரிலோ 1½ மாதமாக பில் வழங்கப்படவில்லை. கறவை மாடுகள் வளர்ப்பவர்களோ பில் பணம் எங்கே என்று தலைவர் மற்றும் செயலாளரிடம் கேட்டு வந்தனர். அவர்களோ இன்னும் மேலிடத்தில் இருந்து பணம் வரவில்லை என்று கூறி வந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கறவை மாடு வளர்ப்பவர்கள் கீழ்கொத்தூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை நேற்று முன்தினம் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து நேற்று காலை 10 மணிக்கு கறவை மாட்டின் உரிமையாளர்கள் சுமார் 200 பேர் பொய்கை பகுதியில் உள்ள பால்வள துணைப்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டதில் ஈடுபட்டனர்.

அப்போது பால்வள துணைப்பதிவாளர் விஷ்வேஸ்வரன் அலுவலகத்தில் இல்லாததால் ஆத்திரமடைந்த கறவை மாட்டின் உரிமையாளர்கள் அலுவலகத்தை பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அலுவலகத்தில் இருந்த மற்ற ஊழியர்கள் அதிகாரி இன்று விடுப்பில் சென்றுள்ளார் என்றனர்.

அதற்கு மாட்டின் உரிமையாளர்கள் எங்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காகவே அவர் அலுவலகத்திற்கு வரவில்லை. இன்னும் 2 நாட்களில் எங்களுக்கு சேர வேண்டிய ரூ.30 லட்சத்தை வழங்கவில்லை என்றால் கறவைமாடுகளுடன் பொய்கை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்வோம் என்று எச்சரிக்கை விடுத்தனர். அதன்பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story