பாசன வாய்க்கால்களை புனரமைக்க வலியுறுத்தி கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டி விவசாயிகள் போராட்டம்


பாசன வாய்க்கால்களை புனரமைக்க வலியுறுத்தி கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 17 May 2018 11:00 PM GMT (Updated: 17 May 2018 9:48 PM GMT)

பாசன வாய்க்கால்களை புனரமைக்க வலியுறுத்தி கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டி, விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

தமிழகத்தில் மழைக்கு முன்பு ஏரிகள், தடுப்பணைகள், பாசன வாய்க்கால்கள் புனரமைக்கப்பட வேண்டும் என்றும், இந்த வருட குறுவை சாகுபடிக்கு காவிரிநீர் பெற்றுத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று காலை திருச்சி சத்திரம் அண்ணா சிலை அருகில் நூதன போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாய சங்க மாநில தலைவர் பூ.விசுவநாதன் தலைமை தாங்கி பேசினார். மாநில துணை செயலாளர் சுப்பிரமணி, துணை அமைப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் உலகநாதன் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் காவிரியில் தண்ணீர்விட வில்லை என்றால், விவசாயிகள் அனைவரும் வறட்சி மற்றும் கடன் தொல்லையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்யும் முடிவுக்கு வரவேண்டிய நிலை ஏற்படும் என்பதை உணர்த்தும் வகையில் கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டியபடி பங்கேற்றனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.

அப்போது மாநில தலைவர் பூ.விசுவநாதன் கூறியதாவது:-

தமிழகத்தில் 2 ஆயிரத்து 65 ஏரிகளை புனரமைக்க ரூ.300 கோடி அரசு அறிவித்தது. ஆனால், அதை செயல்படுத்த முன்வரவில்லை. எனவே, ஏரிகள் புனரமைக்கும் பணிகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மேலும் பாசன வாய்க்கால்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் செயல்பட வேண்டும். இதன் தலைமையகத்தை டெல்லியில் அமைக்க வேண்டும். கர்நாடக அரசு வழங்க வேண்டிய பாக்கி 65 டி.எம்.சி. தண்ணீரை குறுவை சாகுபடிக்கு மத்திய, மாநில அரசுகள் பெற்றுத்தர வேண்டும்.

விவசாயிகள் சாகுபடி செய்யும் உளுந்து, நெல், பருத்தி, மக்காச்சோளம் போன்றவைகளுக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்க வேண்டும்.

அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். பெரம்பலூர் மாவட்டம் சின்னமுட்லு அணைத்திட்டம், கடலூர் மாவட்டத்தில் மழைநீரை சேகரிக்க வீராணம் ஏரியை ஆழப்படுத்த வேண்டும். விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணையாறு கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்பட வேண்டும், புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் தொடங்கப்பட வேண்டும். நாகை மாவட்டத்தில் குமாரமங்கலம் ஆதனூர் தடுப்பணை பணிகள் தொடங்க வேண்டும். கரூர் மாவட்டம் பெரிய தாதம்பாளையம் ஏரி தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போராட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் அ.சுப்பிரமணியன், நிர்வாகிகள் பரமசிவம், ராஜூ, ராமலிங்கம், கண்ணன், கேசவன், ஒன்றிய நிர்வாகிகள் லால்குடி ராமலிங்கம், பெரியசாமி, சண்முகவேல், தர்மலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story